முல்லைப் பெரியாறு அணை உடைய போகிறது.. கேரளாவில் பரப்பப்படும் வதந்தி.. அரசு மறுப்பு!
முல்லைப் பெரியாறு அணை உடைய போகிறது என்று கேரளாவில் பெரிய அளவில் வதந்தி பரப்பப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: முல்லைப் பெரியாறு அணை உடைய போகிறது என்று கேரளாவில் பெரிய அளவில் வதந்தி பரப்பப்பட்டுள்ளது. ஆனால் இது முழுக்க முழுக்க பொய், வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கேரளா அரசு அறிவுறுத்தியுள்ளது.
கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டு 13 மாவட்டங்கள் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. வெள்ளம் ஏற்பட்டு இருக்கும் நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்ட பிரச்சனை எழுந்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் உச்சநீதிமன்றம் அனுமதித்த அளவான 142 அடியை எட்டியுள்ளது. இந்த நிலையில் கேரளாவில் வெள்ள நிலைமை மோசமாக இருப்பதால், நீர் மட்ட அளவை 139 அடியாக குறைக்குமாறு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை நிலவரம்
முல்லைப்பெரியாறு அணையில், இப்போது 142 அடி வரை நீரை தேக்கி வைத்து இருக்கிறோம். இன்னும் சில நாட்களில் அணை திறந்து விடப்பட வாய்ப்புள்ளது. நீதிமன்றம் அனுமதித்த அளவு 142 அடிதான் என்பதால், சில நாட்களில் தண்ணீர் திறந்து விடப்பட வாய்ப்புள்ளது.
கேரளா தரப்பில் வதந்தி
அணையின் கொள்ளளவை 139 அடியாக குறைக்க வேண்டும் என்று கேரளா அரசு வாதம் செய்து வருகிறது. இந்த நிலையில்தான் அணை உடைய போகிறது, அணையில் விரிசல் விழுந்துவிட்டது என்று கேரளாவில் பெரிய வதந்தி பரப்பப்படுகிறது. இதனால் இடுக்கி மாவட்டமே அழிய போகிறது என்று கேரளாவில் சில விஷமிகள் வதந்தி பரப்பி இருக்கிறார்கள்.
அரசு மறுப்பு
ஆனால், இது முழுக்க முழுக்க வதந்தி என்று கேரளா நீர்வளத்துறை கடைசி கட்டத்தில் மறுத்துள்ளது. இதை யாரும் நம்ப வேண்டாம், யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கேரளா அரசு கோரிக்கை வைத்துள்ளது. அதேபோல் இணையத்தில் வதந்தி பரப்புவோர்களை கைது செய்ய சைபர் கிரைமிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சோதனை நடத்தினார்கள்
உண்மையில் தற்போது முல்லைப்பெரியாறு அணை மிகவும் பாதுகாப்பாக வலுவாக உள்ளது. கடந்த 8ம் தேதி தான் தமிழக, கேரளா, மத்திய அதிகாரிகள் கூட்டாக சென்று அணையை சோதனை செய்தனர். அணையில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்று அப்போதே கூறிவிட்டார்கள். இதனால் இரண்டு மாநில மக்களுக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்பட போவதில்லை.