ஆந்திராவில் தமிழர்கள் மீது தாக்குதல்- வாலஜாபேட்டை டோல் கேட்டை முற்றுகையிட்டு நாம் தமிழர் போராட்டம்!
வாலஜாபேட்டை: தமிழக மாணவர்களை கண்மூடித்தனமாக ஆயுதங்களால் தாக்கிய ஆந்திரா கொடுங்கோலர்களைக் கண்டித்து வாலஜாபேட்டை சுங்க சாவடியை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆந்திராவின் திருப்பதி, எஸ்.ஆர்.புரம் வடமாலாபேட்டை தேசிய நெடுஞ்சாலையில் தமிழக மக்கள், மாணவர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர். ஆயுதம் தாங்கிய கும்பல் மற்றும் ஆந்திரா உள்ளூர்மக்களால் தமிழர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டனர்.
தமிழர்கள் மீதான இக்கொடூரத் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திருமாவளவன் கண்டனம்
திருமாவளவன் தமது அறிக்கையில், ஆந்திர எல்லை புத்தூர் சுங்கச்சாவடியில் கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறினையடுத்து தமிழ்நாட்டைச் சார்ந்த கல்லூரி மாணவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். ஏராளமான வண்டிகள் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன. தாக்கப்பட்டவர்களின் நிலை தெரியவில்லை. @CMOTamilnadu உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

சீமான் எச்சரிக்கை
சீமான் தமது அறிக்கையில், சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தும் பாஸ்டேக் முறை பழுதாக இருப்பதாகக்கூறி, அதற்குப் பதிலாக இரு மடங்கு சுங்கக்கட்டணத்தைப் பணமாக செலுத்தக்கூறியதை எதிர்த்துக் கேள்வி கேட்டதற்காக தமிழர்களை இழிவாகப் பேசியும், தமிழக வாகனங்களை அடித்து உடைத்தும், பெண்கள், முதியவர்கள் எனப் பாராது தமிழகத்தைச் சேர்ந்த பொதுமக்கள், ஆந்திர சட்டக்கல்லூரிகளில் படிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆகியோர் மீது ஆயுதங்களைக் கொண்டு கோரத்தாக்குதலைத் தொடுத்ததுமான கொடுஞ்செயல்கள் கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்திருந்தார்.

பண்ருட்டி வேல்முருகன்
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ தமது அறிக்கையில், திருப்பதி அருகே உள்ள வடமாலைபேட்டை சுங்கச் சாவடியில் தமிழக சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது சுங்கச்சாவடி ஊழியர்கள், உள்ளூர் ரவுடிகள் இணைந்து நடத்திய கொலைவெறித் தாக்குதல் கண்டனத்திற்குரியது என கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி போராட்டம்
இந்நிலையில் ஆந்திரா தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இராணிப்பேட்டை வாலாஜாபேட்டை சுங்கசாவடியை நாம் தமிழர் கட்சியினர் இன்று முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஆந்திரா தாக்குதலுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications