ரஜினிக்கு முதல்வராகும் தகுதி இல்லை: சீமான் பொளேர்
அரசியல் களம் நடிகர் ரஜினிகாந்தின் மனநிலைக்கு ஒத்துவராது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழகத்தின் மண்சாராத ஒருவர் முதலமைச்சராவதை விரும்பவில்லை என்றும் மண் சார்ந்த குடிமகனுக்கே முதலமைச்சராகும் தகுதி உள்ளது என்றும் சீமான் கூறியுள்ளார்.
சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் கடந்த 5 நாட்களாக ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இந்த சந்திப்பின் போது ரசிகர்கள் மத்தியில் முதல் நாள் உரையாற்றிய ரஜினிகாந்த் தனது அரசியல் வருகை குறித்து குறிப்பால் உணர்த்தினார். ஒரு வேளை அரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வருபவர்களை சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்றும் ரஜினி பேசினார்.
இறுதிநாளான இன்று பேசும்போது, ' என்னைத் தமிழனாக மாற்றியது நீங்கள்தான். அரசியல் குறித்து நான் பேசியது விவாதங்களையும் எதிர்ப்புகளையும் உருவாக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. அரசியலில் எதிர்ப்புதான் மூலதனம். தமிழகத்தில் அரசியல் நிலவரம் சரியாக இல்லை. நிர்வாக அமைப்பு சீர்கெட்டுப் போய் இருக்கிறது' எனச் சாடினார். அவருடைய பேச்சில் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், சீமான், அன்புமணி, திருமாவளவன் உள்ளிட்டவர்களைப் பாராட்டினார்.

அரசியலுக்கு ஒத்துவரமாட்டார்
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழகர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், "ரஜினியை ஒரு நடிகராக கொண்டாடுகிறேன் அவர் எவ்வளவு படம் வேண்டுமானாலும் நடிக்கட்டும், எவ்வளவு வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்கட்டும் ஆனால் அரசியல் என்பது அவரது மனநிலைக்கு ஒத்துவராது. அரசியல் தவிர வேறு எந்த விஷயம் செய்தாலும் ரஜினியை நான் வரவேற்கிறேன்" என்றார்.

முதல்வர் தகுதியில்லை
முதல்வராகும் தகுதி மண் சார்ந்தவருக்கே உள்ளது, நடிகர் ரஜினி முதல்வராக வேண்டாம். எம்ஜிஆர் தமிழன் இல்லாத போதும் ஏற்றுக்கொண்டோமே என்ற கேள்வி எழும், நமது மக்கள் எம்.ஜி.ஆரை மலையாளியாகப் பார்க்கவில்லை. அது நம் மக்களின் பெருந்தன்மை. ஆனால், இந்த மண்ணை இங்கேயே பிறந்து வளர்ந்த எங்கள்அளவுக்கு ரஜினியால் நேசிக்க முடியாது என்றார்.

வரலாறு முக்கியம்
தமிழர்களாகிய தங்களுக்கு வரலாறு, மொழி, பண்பாடு தெரியும், இந்த மண்ணிண் பழம்பெரும் வாழ்க்கை முறைகளை நாங்கள் தெரிந்து வைத்துள்ளோம் என்றார் சீமான். எங்கள் மக்களுக்கும் என் தாய், தந்தை, சகோதரிகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்த்து பார்த்து செய்ய இந்த மண்ணிலேயே பிறந்த தமிழனால் மட்டுமே முடியும் என்றும் அவர் கூறினார்.

நடிப்பை மட்டும் பாருங்க
நடிகர் ரஜினி மேலும் மேலும் எவ்வளவு படத்தில் வேண்டுமானாலும் நடிக்கட்டும், அந்தப் படங்களை ரசிகர்களுடன் ரசிகனாக கைதட்டி பார்த்து மகிழும் தொண்டனாக தான் இருப்பேன் என்றும், நடிப்பை விட்டு விட்டு அரசியலுக்கு வரலாம் என்று அவர் நினைத்தால் ரஜினியின் மனநிலைக்கு அது ஒத்தேவராது என்றும் ஒரே போடாக போட்டுள்ளார் சீமான்.












Click it and Unblock the Notifications