நாகையில் 2 விவசாயிகள் மரணம்... உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு!
நாகை அருகே 2 விவசாயிகள் உயிரிழந்துள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
நாகை: தமிழகத்தில் விவசாயிகள் உயிரிழப்பு தொடர் கதையாகி வருகிறது. நாகப்பட்டினம் அருகே நெற்பயிர்கள் கருகியதால் முருகையன், ஆரோக்கியசாமி என்ற விவசாயிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போதுமான மழை இல்லாததாலும் காவிரி நீரை திறந்துவிட கர்நாடக அரசு மறுத்துவருவதாலும் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் விவசாயம் முற்றிலும் பொய்த்துப் போய்விட்டது. இதனால் மனமுடைந்த விவசாயிகள் விஷம் அருந்தியும் அதிர்ச்சியிலும் உயிரிழந்து வருகின்றனர்.
9 விவசாயிகள்
இதுவரை தமிழகத்தில் மொத்தம் 8 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கோவிந்தராஜ், அழகேசன், வெள்ளையன், ரத்தினவேல், நவநீதம் ராஜேஷ்கண்ணன், ஈரோடு ராமலிங்கம் வரிசையில் தற்போது நாகை முருகையன், ஆரோக்கியசாமி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
நாகை முருகையன்
வேதாரண்யம் அருகே தலைஞாயிறு பிரிஞ்சிமூலையைச் சேர்ந்த முருகையன் அதே ஊரைச் சேர்ந்த ராமச்சந்திரனிடம் 3 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்திருந்தார்.
தூக்கிட்டு தற்கொலை
ஆனால் போதுமான தண்ணீர் இல்லாததால் நெற்சாகுபடி பொய்த்துப் போனது. இதனால் மனமுடைந்த முருகையன் நேற்று மாலை தம்முடைய வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சாலை மறியல்
அவரது உடலை வாங்க மறுத்து நிவாரணம் கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். பின்னர் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். இச்சம்பவம் விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆரோக்கியசாமி
இதேபோல் நாகை தேந்தமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி ஆரோக்கியசாமியும் நெற்பயிர்கள் கருகியதால் உயிரிழந்துள்ளார். தொடரும் விவசாயிகளின் உயிரிழப்பு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.