அட்ரா சக்க.. நாகர்கோவிலில் டுவிட்டரில் புகார் செய்த ரயில் பயணிக்கு, நெல்லையில் இன்ப அதிர்ச்சி
Recommended Video
நெல்லை: ரயிலில் கழிவறை அசுத்தமாக இருந்தது குறித்து, டுவிட்டரில் கொடுத்த புகாரை ஏற்று உடனடியாக மத்திய அமைச்சர் உத்தரவுப்படி, கழிவறை சுத்தம் செய்யப்பட்டுள்ளது பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவிலில் இருந்து, பெங்களூருக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 17236) இயக்கப்படுகிறது. வள்ளியூர், நெல்லை, மதுரை, சேலம், ஒசூர் வழியாக இயக்கப்படும் இந்த ரயில், தினசரி இரவு, 7:10 மணிக்கு நாகர்கோவிலில் புறப்படும்.
நேற்று முன்தினம் இந்த ரயிலின், 'எஸ் - 3' ஸ்லீப்பர் கோச் பெட்டியில், ஜெகன் என்பவர் பயணித்துள்ளார். அவருடன் கேரள மாநிலத்தை சேர்ந்த சிலரும் பெங்களூருக்கு பயணித்துள்ளனர்.
பயணியின் ஐடியா
அப்போது, ரயில் பெட்டியில் உள்ள கழிவறை சுத்தம் செய்யப்படாமல், துர்நாற்றம் வீசியது. இதனால் ரயில் பயணிகள் கோபமடைந்தனர். ரயில்வே நிர்வாகத்தை திட்டியபடி வந்தனர். ஆனால் அதே பெட்டியில் பயணித்த கேரள பயணி ஒருவர், ஒரு ஐடியா செய்தார்.
செல்போனில் போட்டோ
சம்மந்தப்பட்ட கழிவறையை செல்போனில் போட்டோ எடுத்து, பயணிகளின் நிலை ஆத்திரம் குறித்து, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயலின் டிவிட்டர் பக்கத்தில், இரவு, 8:00 மணியளவில் தனது புகாரை பதிவு செய்தார்.
உடனடி நடவடிக்கை
இந்நிலையில், இரவு, சுமார் 9:00 மணிக்கு, ரயில் திருநெல்வேலி சந்திப்பு வந்தடைந்தது. அங்கு ரயில் நின்றதும், ஏற்கனவே தயாராக இருந்த துப்புரவு பணியாளர்கள், விரைந்து ஓடிவந்து கழிவறையை சுத்தம் செய்தனர். இதனால் பயணிகள் ஆச்சரியம் அடைந்தனர்.
சரி செய்துவிட்டோம் சார்
அதுமட்டுமின்றி, ரயில் கிளம்பிய சில நிமிடங்களில், புகார் செய்தவரின், டிவிட்டர் கணக்கிற்கு மத்திய அமைச்சரின் டிவிட்டர் கணக்கிலிருந்து ஒரு மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'உங்கள் புகாருக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது' என கூறப்பட்டிருந்தது. இரவு நேரத்திலும் வேகமாக செயல்பட்ட மத்திய அமைச்சகத்தின் நடவடிக்கையை பயணிகள் பாராட்டினர்.