தினுசு தினுசா கதை விடுவதா? ரஜினிக்கு இது ஆகாத காரியம்... - நமது அம்மா அட்டாக்
கருணாநிதியின் நண்பர் ரஜினிக்கு திடீர் கரிசனம் எம்ஜிஆர் மீது வந்தது ஏன் என்று நமது அம்மா நாளிதழ் சாடியுள்ளது.
சென்னை: கறுப்பு எம்ஜிஆர் என்று கதை விட்டவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டார்கள் என்பதை ரஜினி உணர்ந்து கொள்வதே உத்தமம் என்று நமது அம்மா நாளிதழில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்லூரியில் எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்து பேசிய நடிகர் ரஜினிகாந்த்.
பணத்தை கொடுத்தே சிவந்த கை எம்ஜியாருடையது என்றும், அவர் ஒரு தெய்வ பிறவி என்றும் புகழாரம் சூட்டினார் ரஜினிகாந்த். இந்தியாவிலேயே கட்சியை கட்டுப்பாட்டுடன், நல்ல ஆளுமையுடன் வைத்திருந்தவர் ஜெயலலிதா என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
தன்னைப் பற்றி தனது மனைவி லதா குடும்பத்தாரிடம் நல்லபடியாக சொல்லி திருமணத்திற்கு ஏற்பாடு செய்துவைத்தது எம்ஜிஆர் என்றார். ராகவேந்திரா மண்டபம் அமைய காரணம் எம்ஜிஆர் என்றும் தெரிவித்தார். தனது உடம்பை நன்கு கவனித்துக்கொள்ளும்படி எம்ஜிஆர் கூறியதாகவெல்லாம் கூறினார் ரஜினிகாந்த்.
நமது அம்மாவில் கட்டுரை
எம்ஜிஆர் உடன் நெருக்கம் காட்டியதாக ரஜினி பேசியது பற்றி பலரும் கருத்து கூறி வரும் நிலையில், நமது அம்மா நாளிதழ் இன்று ரஜினியை கிண்டலடித்துள்ளது. எம்ஜிஆருக்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லாத ரஜினிகாந்த், கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்து கொடுத்தார், கல்யாண மண்டபத்திற்கு அனுமதி வாங்கிக் கொடுத்தார் என தினுசு தினுசாக புதுசு புதுசாக கதை விட்டு அதிமுகவினரை தன் வசப்படுத்தலாம் என கனாக்காணுவது ஆகாத காரியம், வேகாதா வேலையே.
கறுப்பு எம்ஜிஆர்
ஏற்கனவே இதே போல கணக்குப் போட்டுக்கொண்டு கறுப்பு எம்ஜிஆர் நான்தன் என்றெல்லாம் கதை அளந்தவர்கள் நொந்து அழிந்துதான் போனார்கள் என்பதை ரஜினி உணர்ந்து கொள்வதே உத்தமம். அதிமுக எவராலும் அசைக்க முடியாத எஃகுக் கோட்டை.
இரு பெரும் தலைகள்
இங்கே இலையும் இருக்கிறது.. ஓபிஎஸ், ஈபிஎஸ் என்ற இருபெரும் தலையும் இருக்கிறது. ஒன்றரை கோடி தொண்டர்கள் உயிராக கட்டிக்காப்பார்கள். ரஜினிகாந்த் வலையை வேறுபக்கம் வீசுவதே உத்தமம்.
ரஜினிக்கு பாராட்டு
ஆனாலும் ஒன்று அவரை பாராட்டியே ஆகவேண்டும். அது எம்ஜிஆரின் நல்லாட்சியை தருவேன் என்று சொல்ல முடிந்த அவரால் கருணாநிதியின் நல்லாட்சியை தருவேன் என்று சொல்ல முடியாமல் போனதற்காக... என்று நமது அம்மாவில் எழுதப்பட்டுள்ளது.