மிரட்டுகிறது விஷால் குரூப். நாமக்கல் நாடக நடிகர்கள் பரபரப்பு புகார்
நாமக்கல்: அரசியல் கட்சிகளின் அடாவடிகளுக்கு சற்றும் சளைக்காததாக இருக்கிறது நடிகர் சங்கத் தேர்தல். நடிகர் சங்க தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என நடிகர் விஷால் மிரட்டியதாக நாமக்கல் நாடக நடிகர் சங்க தலைவர் நாமக்கல் மாவட்ட எஸ்.பியிடம் புகார் கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட நாடக நடிகர் சங்க தலைவராகவும், தென்னிந்திய நடிகர் சங்க பொறுப்பிலும் இருப்பவர் நாமக்கல்லைச் சேர்ந்த ஆட்டோ ராஜா. இவர் தனது வழக்கறிஞர் அய்யாவு உடன் நாமக்கல் எஸ்.பி அலுவகத்திற்கு வந்து ஒரு புகார் மனுவை கொடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நேற்று முன்தினம் எனது வீட்டிற்கு ஒரு நான்கு சக்கர வாகனத்தில் வந்த கும்பல், வரும் நாட்களில் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் விஷால் குழுவைச் சேர்ந்தவர்கள் நாமக்கலில் பிரச்சாரத்திற்கு வர உள்ளனர். அவர்களுக்கே நீங்கள் ஒட்டு போட வேண்டும் இல்லாவிட்டால் உங்களை கடத்திச் சென்று விடுவோம் என மிரட்டினார்கள்.

இதையடுத்து நான் எனது வழக்கறிஞர் அய்யாவு உடன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார்மனு வழங்க வந்தேன். மேலும் தேர்தல் முடியும் வரை எனக்கு பாதுகாப்பு தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருப்பதாக தெரிவித்தார்.
அப்போது அவருடன் நாடக நடிகர் சங்கத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் இருந்தனர். இந்தப் புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications