தேர்தல் பணியாற்ற அம்மாவின் கட்டளைக்காகக் காத்திருக்கிறோம்: "டிஸ்மிஸ்" நாஞ்சில் சம்பத்
சென்னை: தேர்தலில் களப்பணியாற்ற அம்மாவின் கட்டளைக்காக காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார் அதிமுகவின் கொள்கை பரப்புத் துணை செயலாளர் பதவியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட நாஞ்சில் சம்பத்.
ஊடகங்களில் விவாத நிகழ்ச்சிகளில் அனல் தெறிக்க பேசி வந்தவர் நாஞ்சில் சம்பத். சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அளித்த திகுடு முகடான பேட்டியால் திக்குமுக்காடி போயினர் அதிமுகவினர்... சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் புழுதி பறக்க, அதிமுகவின் துணை கொ.ப.செ பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார் நாஞ்சிலார்.

உள்ளம் துடிதுடிக்க ஜனவரி 5ம் தேதி போயஸ்கார்டனுக்கு நேரில் சென்று உருக்கமான கடிதம் ஒன்றை அளித்தாராம். அதில், உடல்நலம் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்ற தன்னை மருத்துவமனையில் அனுமதித்து தன்னை காப்பாற்றியது, தனது இல்லத் திருமண விழாவை நடத்தி வைத்தது, என முதல்வர் ஜெயலலிதா செய்த பல உதவிகளை குறிப்பிட்டுள்ளாராம்.
கட்சியின் கடைக்கோடி தொண்டனாக கடைசி வரைக்கும் விசுவாசமாக இருப்பேன் என்றும் அந்த கடிதத்தில் உருகியுள்ளாராம்.
பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டாலும் அதிமுகவின் ஊடகத் தொடர்பாளர்தான் என்று கூறியுள்ளார் நாஞ்சில் சம்பத். ஆவடி குமார், பண்ருட்டி ராமச்சந்திரன், சி.ஆர்.சரஸ்வதி, பேராசிரியர் தீரன், டாக்டர் சமரசம் ஆகியோரை ஊடக விவாதங்களில் கலந்துகொள்ள அம்மா ஆணையிட்டு இருக்கிறார். சுதந்திரமாகச் செயல்பட்டு வருகிறோம். இங்கு சொற்பொழிவாளர்கள் மனநிறைவோடு இருக்க முதல்வர் எல்லாவித ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.
இத்தனை ஆண்டுகால அரசியலில் இருந்தும் எனக்கு தேர்தல் அரசியல் மீது ஈடுபாடு இல்லை. நான் ஒரு சொற்பொழிவாளன். மக்களின் மாற்றங்களுக்காக மக்களிடம் பேசுபவன். அதுதான் எனக்குப் பிடித்திருந்தது. மக்களிடம் அரசியல் பார்வையை ஏற்படுத்துவதே எனது நோக்கம். இன்னமும் அதற்கான பயணம் போய்க்கொண்டே இருக்கிறது என்று கூறுகிறார் சம்பத்.
எதிர்வரும் தேர்தல் என்பது அம்மாவின் முதல்வர் பதவியைப் புதுப்பித்துக்கொள்ளும் நேரமே. அதில் என்ன வியூகம் வைத்திருக்கிறார் என்பது எங்கள் தலைமை, எங்களுக்குத் தேவைப் படுகிற நேரத்தில் தெரிவிக்கும். வேண்டுமென்றால், சூழ்நிலையைப் பொறுத்து, கூட்டணி தேவைப்பட்டால் தெரிவிப்பேன் என்று சொல்லி இருக்கிறார். தேர்தல் பணியாற்ற அவரின் கட்டளைக்காகக் காத்திருக்கிறோம் என்று முடித்துள்ளார் நாஞ்சில் சம்பத்.












Click it and Unblock the Notifications