டெல்லி போய்ட்டா உடனே கூட்டணியா?... 'நச்'சென்று கேட்கும் நா.சா!
டெல்லியிலிருந்து சென்னை வந்த நாராயணசாமியிடம், விமான நிலைய செய்தியாளர்கள், தேமுதிக விஜயகாந்த் டெல்லி போகிறாரே, அங்கு காங்கிரஸுடன் கூட்டணி உறுதியாகி விட்டதா என்று கேட்டனர். அதற்குப் பதிலளித்த நாராயணசாமி,
விஜயகாந்த் பிரதமரை சந்திக்க டெல்லி வருவதால் கூட்டணி உறுதி எனக் கூற முடியாது. கூட்டணி பற்றி காங்கிரஸ் மேலிடம்தான் அறிவிக்கும். சோனியாகாந்தி முறைப்படி கூட்டணி குறித்து அறிவிப்பார்.
சி.பி.ஐ கூடுதல் இயக்குனராக அர்ச்சனா ராமசுந்தரம் நியமிக்கப்பட்டதில் விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை. எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரத்தை செய்து வருகின்றனர். மேலும், திறமை, தகுதி அடிப்படையில் அவர் நியமிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு அரசியல் பின்னணி, சிபாரிசு கிடையாது. இதுபோன்ற உயர் பதவிகளுக்கு நியமிக்க தனியாக ஒரு குழு உள்ளது. அந்த குழு பரிந்துரையின் பேரில்தான் நியமிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் வளர்ச்சி எதுவும் இல்லை என மோடி கூறி வருகிறார். பொருளாதாரத்தை பற்றி மோடிக்கு தெரியாது. அவர் தவறான கருத்துக்களை கூறி வருகிறார். குரலை உயர்த்தி பேசினால் மக்கள் நம்பி விடுவார்கள் என நினைக்கிறார். அவர் வெறும் வாய்சவடால் வீரர்.
இதுபோல்தான் கடந்த 2009 ஆம் ஆண்டு பிரசாரம் செய்தனர். ஆனால் மக்கள் நம்பாமல் 2004 ஆம் ஆண்டை விட அதிக இடங்களில் காங்கிரஸ் கூட்டணியை வெற்றி பெற செய்தனர். அதுபோல் தான் 2014ல் நடக்க உள்ளது என்றார் நாராயணசாமி.