மாநில நலன் காரணம் கிடையாது.. சட்டசபை தேர்தலுக்காக மோடி-ஜெ. சந்திப்பு: ஈவிகேஎஸ் இளங்கோவன்
திருச்சி: சட்டசபை தேர்தலை முன்னிட்டே பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் ஜெயலலிதாவின் சந்திப்பு நடந்தது என்றும், இதன் மூலம், பாஜக-அதிமுக நடுவேயிருந்த மறைமுக உறவு அம்பலத்துக்கு வந்துவிட்டது என்றும் காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றம்சாட்டினார்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன் கூறியதாவது: சென்னை வந்த பிரதமர் நரேந்திரமோடி, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துள்ளார். முன்னதாக மோடியை விமான நிலையத்துக்கே சென்று ஜெயலலிதா வரவேற்றுள்ளார்.

உடல்நிலையை காரணம் காட்டி, பல்வேறு நிகழ்ச்சிகளை புறக்கணித்து வந்த ஜெயலலிதா, விமான நிலையம் சென்றது எப்படி? பாஜக மற்றும் அதிமுக இடையேயான போலி முகம், இந்த சந்திப்பின் மூலம் வெளியுலகத்துக்கு தெரியவந்துவிட்டது.
சட்டசபை தேர்தலை முன்னிட்டுதான் ஜெயலலிதாவும், மோடியும் சந்தித்து பேசியுள்ளனர். மாநிலங்களுக்கான நலத்திட்டங்கள் தொடர்பான சந்திப்பு என்பதெல்லாம் ஏமாற்றுவேலை. பாஜக மற்றும் அதிமுக இடையே இருந்த மறைமுக உறவு தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.
மோடி தனது வெளிநாட்டு பயணங்களின்போது, வெளிநாட்டு ஆடைகளைத்தான் அணிந்து செல்கிறார். ஆனால், கைத்தறி ஆடைகளை இந்தியர்கள் அணிய வேண்டும் என்றும், சினிமாத்துறையினர் கதர் ஆடைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அழைப்புவிடுத்துள்ளார். வெளிநாடு செல்லும்போது மோடி இனிமேல், கைத்தறி ஆடைகளை மட்டுமே அணிந்து செல்ல வேண்டும். இவ்வாறு இளங்கோவன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications