வெறும் மழை நீரை மட்டுமே குடித்து "சதம்" போட்டு கலக்கிய நடராஜன் தாத்தா!
விருதுநகர்; ஆயுளையும், ஆரோக்கியத்தையும் அதிகரிக்க எத்தனையோ சத்து பானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கண்டதையும் வாங்கி குடித்து சாப்பிட்டு வந்தாலும் பலரும் 60 வயது தாண்டுவதே இன்றைக்கு அதிசயமாக இருக்கிறது. அதே நேரத்தில் மழைநீரை சேகரித்துவைத்து அதை மட்டுமே குடிநீராக பயன்படுத்தி 100 வயதை கடந்துள்ளார் விருதுநகரைச் சேர்ந்த எஸ்.ஏ. நடராஜன்.
விருதுநகர் இளங்கோவன் தெருவைச் சேர்ந்த எஸ்.ஏ. நடராஜனுக்கு பரமேஸ்வரி,88 என்ற மனைவியும், வன்னியராஜன், ஜெயகர், ராமநாதன், தயானந்தன் என 4 மகன்களும், தனலட்சுமி என்ற மகளும் உள்ளனர். 5வது தலைமுறை கண்டுள்ள நடராஜன்- பரமேஸ்வரி குடும்பத்தில் மகன்கள், மகள், பேரன், பேத்திகள், கொள்ளுப் பேரப் பிள்ளைகள் என 69 பேர் உள்ளனர்.
பருப்பு வியாபாரியான நடராஜன், சிறந்த கால்பந்தாட்ட வீரர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே வியாபார வர்த்தக சங்கத் தலைவராகப் பொறுப்பு வகித்தவர். எண்ணெய், பருப்பு வகைகளுக்கான விலைகளை நிர்ணயம் செய்வதில் முக்கியப் பங்கு வகித்தவர்.
நடராஜனுடன் இவர்களுக்கு வன்னியராஜன், ஜெயகர், ராமநாதன், தயானந்தன் என 4 இவர்களது குடும்பத்தினரும் விருதுநகர் மட்டுமின்றி, சென்னை, கோவை, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர்.
100வது பிறந்தநாள்
விருதுநகரில் உள்ள திருமண மண்டபத்தில் எஸ்.ஏ.நடராஜனின் நூறாவது பிறந்தநாள் விழா சில தினங்களுக்கு முன்னர் விமரிசையாக நடைபெற்றது. குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என ஏராளமானோர் பங்கேற்று நடராஜன்- பரமேஸ்வரி தம்பதியிடம் ஆசி பெற்றனர். தாத்தா, தாத்தா என்று பேரப்பிள்ளைகள் சுற்றி வர உற்சாகமாக பிறந்தநாள் கொண்டாடினார் 100 வயது இளைஞரான நடராஜன்.
சைவ உணவு
கால்பந்தாட்ட வீரரான எஸ்.ஏ. நடராஜன் திருமணத்துக்குப் பிறகு சைவ உணவு மட்டுமே அளவாக சாப்பிட்டு வருகிறார். மகன், மகள் என பெரிய குடும்பம் இருந்தும் யாருக்கும் தாங்கள் தொந்தரவாக இருக்கக் கூடாது என்பதற்காக இத்தம்பதி தனியாகவே வசித்து வருகின்றனர்.
ஆரோக்கியத்தின் ரகசியம்
தினமும் அதிகாலை எழும் பழக்கம் உள்ள இவர், 3 கி.மீட்டர் நடை பயிற்சி மேற்கொள்கிறார். அதன்பின், பல்வேறு செய்தித்தாள்களை படிக்கிறார். விருதுநகர் மாவட்டம் வறண்ட பகுதியாக இருந்தாலும், அவ்வப்போது மழை பெய்யும்போது தொட்டிகளில் மழை நீரை சேமித்து வைத்து, பின்னர் செப்புக் குடங்களில் ஊற்றி வைத்து அந்த நீரையே எப்போதும் குடிநீராகப் பயன்படுத்தி வருகிறார். எஸ்.ஏ.நடராஜன். வெளியூர் சென்றாலும் மழை நீரையே எடுத்துச் சென்று குடிக்கும் பழக்கத்தை 70 ஆண்டுகளாக பின்பற்றி வருகிறாராம் நடராஜன்.
உணவே மருந்து
ஒரு அரசன் போல காலை உணவு சாப்பிட வேண்டும், ஒரு இளவரசனை போல மதிய உணவு சாப்பிட வேண்டும், ஒரு ஏழை போல இரவு உணவு உண்ண வேண்டும் என்பார்கள். இதனை கடைபிடித்த வாழ்கிறார் நடராஜன். சிறு வயது முதலே காந்தியின் கொள்கைகளை பின்பற்றி வாழ்ந்து வருகிறாராம்.
மனைவியின் கை பக்குவம்
சின்ன வயசிலே கால்பந்தாட்ட வீரனாக இருந்ததால் உடல் மீது அதிக கவனம் எடுத்துக்கொண்டேன். திருமணத்திற்குப் பிறகு அசைவ உணவுகளைத் தவிர்த்துவிட்டேன். சைவ உணவு மட்டுமே அளவாக எடுத்துக்கொள்கிறேன்" என்கிற நடராஜன், தன் மனைவி பரமேஸ்வரியுடன் தனியே வசிக்கிறார். இந்த வயதிலும் மனைவியின் கையால் சமைக்கும் உணவுகளையே உண்கிறேன் என்கிறார்.
புகைப்படம்: Thenewsminute