அப்ப ஜெ. ஆட்சியில் அமைச்சர்கள் கொத்தடிமைகளாக இருந்தார்களா மிஸ்டர் 'சசி' நடராஜன்?
தமிழக அமைச்சர்கள் இப்போது சுதந்திரமாக இருக்கிறார்கள் என கூறி ஜெயலலிதா ஆட்சியை மறைமுகமாக விமர்சித்திருக்கிறார் சசிகலா கணவர் நடராஜன்.
சென்னை: திருவிழாவில் காணாமல் போய் திடீரென திரும்பிவந்த கதையாக தலைகாட்ட தொடங்கியுள்ளார் சசிகலாவின் கணவர் நடராஜன். எடப்பாடி அரசில் அமைச்சர்கள் சுதந்திரமாக இருப்பதாக கூறி ஜெயலலிதா ஆட்சியில் அவர்கள் கொத்தடிமைகளாக இருந்தனர் என அம்பலப்படுத்தியிருக்கிறார் சசிகலா நடராஜன்.
சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட அடுத்த நிமிடமே அதிமுகவுக்கு உரிமை கோரியவர் நடராஜன். தஞ்சாவூரில் மச்சான் திவாகரனோடு சேர்ந்து கொண்டு அதிமுகவுக்கே ஓனர் போல சவுண்டுவிட்டுப் பார்த்தார் நடராஜன்.
டெல்லி லாபி
டெல்லியிலே டேரா போட்டுக் கொண்டு லாபி மேல் லாபி செய்து பார்த்தார்.. ஒன்றுமே கை கொடுக்கவில்லை.. மனைவி சசிகலா சிறைக்கு போய் உட்கார்ந்ததுதான் மிச்சம்.. ஆடாத ஆட்டம் போடும் நடராஜனுக்கும் ரிவிட்டை ரெடி செய்தது டெல்லி.
சரணாகதி
இதனால் டெல்லியை பகைக்க வேண்டாம் என பகிரங்கமாக பத்திரிகைகள் மூலம் சரணடைந்தவர் இந்த நடராஜன். இந்த சரணாகதி நாடகம் வென்றுவிட்டதால் இப்போது வெளியே தலைகாட்ட தொடங்கியிருக்கிறார் நடராஜன்.
அமைச்சர்கள் சுதந்திரமாக...
இப்போது டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அமைச்சர்கள் சுதந்திரமாக செயல்படுகிறார்கள். எல்லாவற்றையும் கலந்து ஆலோசித்தே செயல்படுகின்றனர் என்றெல்லாம் கூறியிருக்கிறார். இதன் மூலம் அதிமுகவை மீண்டும் சசிகலா கோஷ்டி கையிலெடுக்க பகீரத பிரயத்தனம் செய்கிறது என்பதே தெரிகிறது.
ஜெ. ஆட்சியில் கொத்தடிமைகள்?
இந்த பேட்டியின் மூலம் இன்னொன்றையும் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் நடராஜன். இப்போது அமைச்சர்கள் சுதந்திரமாக செயல்படுகிறார்கள் என கூறி ஜெயலலிதா ஆட்சியில் கொத்தடிமைகளாகத்தான் இருந்தனர் என ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்துவிட்டார் என்றுதான் கருத முடிகிறது.