மகாத்மாவிற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய குஷ்பு
சென்னை: மகாத்மா காந்தியின் 68 ஆவது நினைவு தினத்தினை ஒட்டி தமிழகத்தில் அவரது உருவச்சிலைக்கு பல்வேறு தலைவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
மகாத்மா காந்தியின் 68 ஆவது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி மெரினா கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலையின் கீழ் அவரது உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சிலை அருகே பந்தலும் போடப்பட்டிருந்தது. அந்த பந்தலில் சென்னை சர்வோதய சங்கம் சார்பில் பஜனை பாடல்களை பாடினார்கள். காந்தியின் நினைவாக 5 பேர் அங்கு அமர்ந்து ராட்டையில் நூலை நூற்றனர். இந்த காட்சிகளை பொதுமக்கள், கண்டு களித்தனர்.
தமிழக கவர்னர் ரோசய்யா காந்தியின் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். சிறிது நேரம் அவர்கள் அங்கு அமர்ந்திருந்து விட்டு சென்றனர்.
காங்கிரஸ் சார்பில் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு காந்தி படத்துக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் நடிகை குஷ்பு காந்தி படத்துக்கு அஞ்சலி செலுத்த வந்தார். அவர் காந்தி படத்துக்கு மலர் தூவி விட்டு சிறிது நேரம் அங்கு அமர்ந்திருந்தார்.
பஜனை பாடல்களையும், ராட்டையில் நூல் நூற்றதையும் பார்த்து ரசித்தார். 10 நிமிடங்கள் அங்கு அமர்ந்திருந்த அவர் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். முன்னாள் எம்.எல்.ஏ. யசோதாவும் காந்தி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சத்திய மூர்த்தி பவனில் காந்தி படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
காந்தி படத்துக்கு தங்கபாலு, திருநாவுக்கரசர், குஷ்பு, வசந்தகுமார், கோபண்ணா, ஆர். தாமோதரன், ஆர்.கே. வெங்கட், டி.வி. துரைராஜ், எஸ்.வி. சங்கர், வெங்கடேஷ், விஜயதரணி எம்.எல்.ஏ. ஜெயக்குமார், ரங்கபாஷ்யம், நாஞ்சில் பிரசாத், எஸ்.எம்.திரவியம் உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழியும் எடுத்தனர். காந்தி பற்றிய குறும்படமும் ஒளிபரப்பட்டது.