கோபத்தில் போனவர் திரும்பாததால் இறந்ததாக கருதி மகன்கள் இறுதிச்சடங்கு..தகவல் கிடைத்து பதறி வந்த தந்தை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே கோபத்தில் வீட்டை விட்டு சென்ற தந்தை உயிரிழந்துவிட்டதாக கருதி வேறு ஒருவரின் உடலுக்கு மகன்கள் இறுதிச்சடங்கு நடத்தியுள்ளனர். இந்த நிலையில், கடைசி நேரத்தில் தகவல் அறிந்து அவர்களது தந்தை உயிருடன் வந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே நெடுமானூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 65).
கூலித்தொழிலாளியான சுப்பிரமணிக்கு கவுண்டமணி (30), செந்தில் (28) என இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்.. வழக்கு விசாரணை முடிவடைந்தது.. உயர் நீதிமன்றத்தில் போலீஸ் பதில்
தேடி அலைந்துள்ளனர்
குடும்ப பிரச்சினை காரணமாக சுப்பிரமணி கோபித்துக்கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பாக வீட்டை விட்டு வெளியேறியதாக சொல்லப்படுகிறது. கோபித்துக்கொண்டு சென்ற தந்தை வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த மகன்கள் பல்வேறு இடங்களில் தேடி அலைந்துள்ளனர். உறவினர் வீடுகளுக்கு சென்று இருக்கலாம் என உறவினர்களை தொடர்பு கொண்டு தேடி வந்தனர்.
முதியவர் சடலம்
இதற்கிடையே, கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருகம் என்ற பகுதியில் முதியவர் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கிடந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசாரும் சடலத்தை மீட்டு உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். அதோடு அவரது அடையாளத்தை காணும் முயற்சியாக சமூக வலைத்தளங்களிலும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தனர்.
அடக்கம் செய்யும் பணியில்..
இதைப்பார்த்த சுப்பிரமணியின் மகன்கள், தனது தந்தையின் உடல் அமைப்புடன் உயிரிழந்த நபர் ஒத்துப்போயிருந்ததால் தந்தை தான் இறந்து விட்டார் என்ற முடிவுக்கு வந்தனர். உடனே தியாகதுருகம் வனப்பகுதியில் கிடந்த சடலத்தை எடுத்துக்கொண்டு வந்த சுப்பிரமணியின் மகன்கள், நெடுமானூர் கிராமத்திற்கு கொண்டு சென்று உடலை அடக்கம் செய்யும் வேலைகளில் ஈடுபட்டனர். தங்கள் உறவினர்களுக்கும் தந்தை இறந்து விட்டதாக கூறி இறுதிசடங்குகளுக்கான ஏற்பாடுகளையும் செய்தனர்.
உயிருடன் இருந்த சுப்பிரமணி
இதனால் உறவினர்கள் பலரும் சோகத்துடன் நெடுமனூர் கிராமத்திற்கும் வருகை தர தொடங்கினர். அந்த வகையில், சுப்பிரமணியன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மாலை வாங்க எலவனாசூர்கோட்டைக்கு அவரது உறவினர் சென்றார். அப்போது கடைவிதியில் சுப்பிரமணி வந்து கொண்டிருந்ததை பார்த்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த உறவினர், நீங்கள் இறந்து விட்டதாக கூறி ஒரு சடலத்திற்கு இறுதிசடங்குகள் நடப்பதாக கூறினார். இதனால், அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி தனது ஊருக்கு சென்றார்.
தந்தை வந்ததை கண்டு..
தந்தை இறந்து விட்டார் எனக் கருதி இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை செய்த மகன்கள், தந்தையைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த தகவல் போலீசாருக்கும் கிடைத்தது. உடனடியாக விரைந்து வந்த போலீசார், அடையாளம் தெரியாமல் இருந்த பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருடன் இருக்கும் தந்தை இறந்துவிட்டதாக கருதி வேறு ஒருவரின் சடலத்திற்கு மகன்கள் இறுதிச்சடங்குகள் செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.