முன்கூட்டியே திறக்கப்பட்டது முள்ளிவாய்க்க்கால் நினைவு முற்றம்...!
தஞ்சாவூர்: முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் உலக தமிழர்கள் வந்து வழிபட்டு செல்லும் புனித இடமாக செயல்படும். தமிழர்களின் நினைவு இடமாக விளங்கும். ஈழத்தில் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அவர்களது நினைவு சின்னமாக இந்த முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் செயல்படும் என்று உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
தஞ்சை- விளார் சாலையில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதைத் திறக்க மதுரை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இன்று இந்த முற்றத்தை பழ. நெடுமாறன் ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார்.
சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் தலைமை தாங்கினார். பின்னர் முற்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்த்தாய் சிலைக்கு நெடுமாறன் மாலை அணிவித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது நெடுமாறன் கூறுகையில், முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழா தோழமை கட்சியினர், மக்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. ஆனாலும் வழக்கம் போல் 8, 9, 10-ந் தேதிகளில் விழா நடைபெறும்.
8-ந் தேதி மாலை 5 மணிக்கு விழா தொடங்குகிறது. முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தில் உள்ள முத்துக்குமார் திடல் பாலச்சந்திரன் அரங்கில் விழா நடைபெறும். விழாவில் அழைப்பு விடுத்துள்ள அனைத்து தலைவர்களும், தமிழ் அறிஞர்களும், தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளாக உலக தமிழர் உதவியுடன் இந்த முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் வேலை சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இது யாருக்கும் எதிரானது அல்ல. முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் தமிழர்களின் ஒப்பற்ற கலைக்கோவில். இதனை சிலர் இடிக்க வேண்டும், தகர்க்க வேண்டும் என்று ஈடுபட்டனர்.
மத்திய உளவு துறை போலீசார் இந்த முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இதனை யார் தடுக்க நினைத்தாலோ, இடிக்க நினைத்தாலோ அவர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்த முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் உலக தமிழர்கள் வந்து வழிபட்டு செல்லும் புனித இடமாக செயல்படும். தமிழர்களின் நினைவு இடமாக விளங்கும். ஈழத்தில் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அவர்களது நினைவு சின்னமாக இந்த முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் செயல்படும்.
இலங்கையில் நடைபெற்ற போரை கண்டித்து தமிழகத்தில் முத்துக்குமார் உள்ளிட்ட 20 பேர் தீக்குளித்து இறந்தனர். அவர்களின் நினைவு சின்னமாக விளங்கும். இதனை இடிக்க நினைத்தால் முள்ளி வாய்க்காலில் இறந்தவர்கள் ஆன்மா, முத்துக்குமார் ஆன்மா மன்னிக்காது என்றார் அவர்.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நவம்பர் 8ம் தேதிதான் திறப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் நினைவு முற்றத்தைத் திறப்பதற்கு கொடுக்கப்பட்ட கோர்ட் அனுமதியை எதிர்த்து சிலர் அப்பீல் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்ததால் முன்கூட்டியே அதைத் திறந்து விட்டனர்.