வேண்டாம்.. வேண்டாம்.. ஹைட்ரோ கார்பன் வேண்டாம்.. 99 நாள் போராட்டக் குரலை அவமதிக்கும் அரசு
ஹைட்ரோ கார்பன் வேண்டாம் என 99 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடந்தும், தமிழக அரசு அதனைக் கண்டுக் கொள்ளாமல் இருப்பது போராட்டக்காரர்களிடையே கொந்தளிப்பை அதிகரித்துள்ளது.
புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நெடுவாசலில் செயல்படுத்தக் கூடாது என்று கோரி 100 கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து 99வது நாளாக இன்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா பகுதியில் எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனை நடைமுறைபடுத்தக் கூடாது என்று நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வாணக்கன்காடு, கோட்டைக்காடு உள்ளிட்ட கிராமங்களில் போராட்டம் வெடித்தது.
அப்போது மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வரப்படாது என்று உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
காற்றில் பறந்த வாக்குறுதி
ஆனால், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்க விடும் விதமாக, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதுக்கோட்டை உள்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதியில் எரிவாயு எடுக்க தனியார் நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளார். இதனால் வெகுண்டெழுந்த மக்கள் தங்களது 2ம் கட்டப் போராட்டத்தை தொடங்கினார்கள்.
2ம் கட்டப் போராட்டம்
கடந்த ஏப்ரல் மாதம் 12ம் தேதி தொடங்கப்பட்ட 2ம் கட்டப் போராட்டம் தொடர்ந்து 99வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. இதில், மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு விதமான போராட்டங்களை மக்கள் நடத்தி வருகின்றனர்.
நூதனப் போராட்டங்கள்
குறிப்பாக, மண்சோறு சாப்பிடுதல், எரிவாயு குழாய் நெஞ்சில் பாய்ந்து விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது உள்ளிட்ட நூதனப் போராட்டங்களை நடத்தினார்கள். ஆனாலும் மத்திய மாநில அரசுகள் நெடுவாசல் போராட்டத்தை மருந்துக்குக் கூட கண்டு கொள்ளவில்லை.
போராட்டத்தின் 100வது நாள்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடும் வரை போராட்டம் தொடரும் என்று உறுதியாக நெடுவாசல் மக்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதில் காட்டும் அக்கறையில் கொஞ்சமாவது நெடுவாசல் மக்கள் மீது காட்டினால் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும். நாளை 100வது நாளை எட்ட உள்ளது போராட்டம். இந்நிலையில் எப்போது ஏற்படும் விடிவு என ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள் 100 கிராமத்து மக்கள். விடியுமா?