நீட் தேர்வு கருணை மதிப்பெண்ணை எதிர்த்து சென்னை மாணவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு
நீட் கருணை மதிப்பெண்ணை எதிர்த்து சென்னை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நீட் வினாத்தாள் குளறுப்படியால் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து சென்னை மாணவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆங்கிலத்தில் தேர்வு எழுதிய தனக்கு செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் ஒதுக்கிய இடத்திலேயே நீடிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் தமிழில் கேட்கப்பட்ட கேள்விகளில் குளறுபடிகள் ஏற்பட்டது. அதனால், நீட் தேர்வை தமிழில் எழுதிய தமிழக மாணவர்கள் 24,000 பேருக்கு கிடைக்க வேண்டிய மதிப்பெண்கள் கிடைக்காமல் போனது. அதனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி டி.கேரங்கராஜன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் உயர் நிதிமன்றம், ஜூலை 10 ஆம் தேதி தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 49 கேள்விகளுக்கு 196 மதிப்பெண்கள் கருணை அடிப்படையில் அளிக்க வேண்டும் உத்தரவிட்டது. மேலும், நீட் தரவரிசையை திருத்தி வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது.
நீட் தேர்வு தரவரிசைப்படி இந்த தீர்ப்புக்கு முன்னதாகவே முதல்கட்ட கலந்தாய்வு நடைபெற்றுவிட்டதால், கலந்தாய்விலும் தரவரிசையிலும் மாற்றம் ஏற்படும் என்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இதற்கு ஒரு சில மருத்துவக் கல்லூரிகலில் 100, 200 இடங்கள் அதிகரிப்பதன் மூலம் சரி செய்யலாம் என்று கூறியதோடும் உச்சநீதிமன்றத்தில் நீட் தொடர்பாக யார் வழக்கு தொடர்ந்தாலும் தனது தரப்பை விசாரிக்காமல் தீர்ப்பு வழங்கக்கூடாது என்ற கேவியட் மனுவை தாக்கல் செய்தார்.
இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை மாணவர் சத்யாதேவர் என்பவர் நேற்று உச்ச நீதிமன்மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மாணவர் சத்யாதேவர் ஆங்கிலத்தில் நீட் தேர்வு எழுதியுள்ளார். இவருக்கு செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்பால் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் ஒதுக்கீடு பெற்ற தனக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அதே கல்லூரியில் ஒதுக்கீடு நீடிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்னிலையில் நாளை திங்கள்கிழமை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.