எங்க, என் பேரு இருக்கான்னு பார்ப்போம்... இறுதி வாக்காளர் பட்டியலை பார்வையிட மக்கள் ஆர்வம்!
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் 10 தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. புதிதாக 70 ஆயிரம் வாக்காளர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் கருணாகரன் வெளியிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, "நெல்லை மாவட்டத்தில் 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு 1.1.2015 ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த நவம்பர் 15 ஆம்தேதி வெளியிடப்பட்டது.
நவம்பர் 10 ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் பெறப்பட்டது. அதன் அடிப்படையில் நெல்லை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் நெல்லை மாவட்டத்தில் புதிதாக 70 ஆயிரம் வாக்காளர் சேர்ந்துள்ளனர். 5843 பேர் நீக்கப்பட்டுள்ளனர். புதிதாக சேர்ந்த வாக்காளர்களுக்கு மட்டும் ஜனவரி 25 ஆம் தேதியன்று தேசிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.