இதுதான் வறட்சியை ஆய்வு செய்யும் லட்சணமா? - கொந்தளிக்கும் நெல்லை விவசாயிகள்
வறட்சி பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள் சில மணி நேரத்தில் திரும்பியதால் விவசாயிகள் கோபமடைந்தனர்.
நெல்லை: தமிழகத்தில் தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டதால் மாநிலம் முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது. நூற்றுக்கணக்கான விவசாயிகள் மரணமடைந்து வருகின்றனர்.
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என விவசாய சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மாவட்டம் தோறும் வறட்சி பாதித்த பகுதிகலை ஆய்வு குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை இந்தாண்டு கார் மற்றும் பிசான பருவ நெல் சாகுபடி நடக்கவில்லை. பிற இடங்களில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் வறட்சியால் கருகி வருகின்றன. இந்நிலையில் நெல்லை பகுதியில் கலெக்டர் கருணாகரன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
முதலில் மானூர் கிராமப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் நாங்கள் பிறந்ததில் இருந்த இது போன்ற வறட்சியை பார்த்ததில்லை. வடகிழக்கு பருமழை பொய்ததால் நாங்கள் நெல்லுக்கு பதிலாக பயிறு வகையை நடவு செய்தோம். அதுவும் எங்களுக்கு கை கொடுக்கவில்லை என்று கூறினர்.
ஆடு மாடுகளுக்கு தீவணம் கூட இல்லாமல் கஷ்டப்படுகிறோம். எங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் தொழில் செய்ய வேறு இடங்களுக்கு இடம் பெயர வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று தெரிவித்தனர்.
இதைக் கேட்ட ஆய்வுகுழுவினர் சில மணி நேரத்திலேயே அங்கிருந்து புறப்பட்டதால் பல பகுதிகளை பார்க்க வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் கோபத்தில் உள்ளனர். இதுதான் வறட்சியைக் காண வந்த லட்சணமா என்று அதிகாரிகள் செயலுக்கு விவசாயிகள் கேள்வி எழுப்பினர்.












Click it and Unblock the Notifications