பாதி வழியில் பழுதான அரசு பஸ்... நடந்தே ஊருக்கு சென்ற மாணவிகள்- பீதியில் பெற்றோர்
எட்டயபுரம்: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்திலிருந்து சோழபுரம் செல்லும் அரசு பேருந்து ஒன்று பாதி வழியில் பழுதாகி நின்றதால், அதில் பயணம் செய்த மாணவிகள் நடந்தே ஊருக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.
எட்டயபுரத்தில் உள்ள ராஜா மேல்நிலைப்பள்ளி மற்றும் பாரதியார் நினைவு நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எட்டயபுரத்தை சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களின் வசதிக்காக எட்டயபுரத்திலிருந்து கீழஈரல் வழியாக சோழபுரத்திற்கும், அதே போல் எட்டயபுரத்திலிருந்து சிந்தலக்கரை, முத்தலாபுரம் வழியாக தப்பாத்திக்கும், கோவில்பட்டியிலிருந்து ராஜாபட்டிக்கும் காலை, மாலை என இரு நேரங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இந்த மூன்று வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்தப் பேருந்துகளில் அடிக்கடி டயர் வெடிப்பது உள்ளிட்ட பழுது ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் பள்ளி முடிந்து எட்டயபுரத்திலிருந்து சோழபுரம் செல்வதற்காக மாணவ, மாணவிகள் ஒரு அரசு பேருந்தில் ஏறினார். சுமார் அரை கிமீ தொலைவு மட்டுமே சென்ற அந்தப் பேருந்து, திடீரென பழுதாகி பாதி வழியில் நின்றது. அந்தப் பேருந்தில் சுமார் 80க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இருந்தனர்.
இதனால் திகைத்த கண்டக்டரும், டிரைவரும் அந்த வழியாக சென்ற மற்ற அரசு பேருந்துகளை நிறுத்தி மாணவிகளை அனுப்ப முயன்றனர். ஆனால் எந்த அரசு பேருந்தும் அதை கண்டுகொள்ளவில்லை. இது நீண்ட நேரம் நீடித்ததால் வேறு வழியின்றி மாணவ, மாணவிகள் ஊருக்கு நடந்தே சென்றனர்.
மாலை நேரம் அதுவும் ஆள் அரவமற்ற காட்டுப் பகுதியில் மாணவிகள் கும்பலாக சென்றதால் பிரச்சனை ஏற்பட வாய்ப்பில்லை. இருப்பினும் மாணவிகள் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு என சம்பவத்தைக் கேள்விப்பட்ட பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications