நெல்லை அரசு கல்லூரி மாணவிகள் 25 பேர் லண்டனில் படிக்க தேர்வு
நெல்லை: தமிழக அரசின் வெளிநாட்டுஉயர் கல்வி திட்டத்தின் மூலம் 25 மாணவ, மாணவிகள் லண்டன் பல்கலையில் ஒரு செமஸ்டர் காலம் தங்கி பயில தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் 3 பேர் லண்டனில் படிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளில் சிறப்பாக கல்வி பயில்வோரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை தேர்வு செய்து வெளிநாட்டில் உயர்கல்வி பயிலச்செய்யும் திட்டத்தை கடந்த 2013ல் முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.
தமிழக உயர்கல்வி மன்றமும், பிரிட்டீஷ் கவுன்சிலும் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டன. இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே இத்தகைய முன்னோடி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் பட்டமேற்படிப்பு பயிலும் மாணவ, மாணவியர்கள் 25பேர் மற்றும் ஐந்து பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு லண்டன் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்படுகிறார்கள்.
தமிழகம் முழுவதும் உள்ள 82 அரசு கல்லூரிகளில் பயில்வோரில் சுமார் 800 பேர் ஆரம்பக்கட்ட தேர்வை எழுதினர். அதில் தேர்வானவர்களுக்கு, சென்னையில் உயர்கல்வி மன்றம்(டான்சி) ஆங்கில புலமை தேர்வை நடத்தியது. அதன்பின்னர் பிரிட்டீஷ் கவுன்சில் மையத்தில் நடந்த தேர்வில் 22 மாணவிகள், 3 மாணவர்கள் என 25 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
தற்போது பட்டமேற்படிப்பில் முதலாமாண்டு பயிலும் இவர்கள் மூன்றாவது செமஸ்டரை செப்டம்பர் 17 முதல் 2015 ஜனவரி 23 வரையிலும் லண்டனில் உள்ள ஷெபீல்டு ஹாலம் பல்கலையில் தங்கி பயில்கின்றனர்.
அங்கேயே தேர்வு எழுதி பட்டத்தோடு அடுத்த செமஸ்டரை தங்கள் பயிலும் கல்லூரியில் முடிப்பார்கள். மாணவர்களின் விமான கட்டணம், விடுதி, உணவு, தினசரி செலவு என ஒரு மாணவருக்கு 15 லட்சம் ரூபாய் வீதம், தமிழக அரசு மொத்தம் 4.5 கோடி ரூபாய் செலவு செய்கிறது.
ராணி அண்ணா கல்லூரி
திருநெல்வேலி பேட்டை, ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் மதுமிதா இந்து, ரீமா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மதுமிதா இந்து, நெல்லை சங்கர்நகரை சேர்ந்தவர். இவரது தந்தை வண்ணமுத்து ஆட்டோ டிரைவராக உள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்தவர். தற்போது எம்.எஸ்.சி.,விலங்கியல் முதலாமாண்டு பயில்கிறார். பி.எஸ்சியில் 83 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளார்.
கல்லூரி மாணவி ரீமா
இவருடன் தேர்வான ரீமா, நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை சேர்ந்தவர். இவரது தந்தை மீரான், கடந்த ஆண்டு காலமாகிவிட்டார். தற்போது தாயார் நூர்ஜகானின் கவனிப்பில் உள்ளார். இவரும் எம்.எஸ்சி விலங்கியல் முதலாமாண்டு பயில்கிறார். பி.எஸ்.,சியில் 85 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
காமராஜர் அரசு கல்லூரி
நெல்லை மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் எம்.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருபவர் மணிமேகலா. தமிழக அரசு செலவில் லண்டனில் 6 மாதம் தங்கி படிக்க தேர்வு பெற்றுள்ளார்.
வெளிநாட்டு படிப்பு
மாணவி மணிமேகலாவின் சொந்த சொந்த ஊர் பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர். தந்தை வெற்றிவேல். சர்வோதயா நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார். தாய் வெ.மீனாட்சி ஆசிரியை. இவருக்கு கிருஷ்ணவேணி என்ற தங்கை உள்ளார்.
மாணவிக்கு வழியனுப்புதல்
வெளிநாட்டு படிப்புக்காக ஆங்கில பேச்சுத்திறன், எழுதும் திறன் உள்ளிட்ட 3 கட்ட தேர்வுகளுக்கு பின்னர் மாணவி மணிமேகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாணவி மணிமேகலாவை லண்டனுக்கு வழியனுப்பும் விழா கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது.
கல்லூரி முதல்வர் தர்மராஜ் தலைமை தாங்கி, மாணவிக்கு பாராட்டு கடிதம் வழங்கினார்.