பெங்களூரு குண்டு வெடிப்பு- நெல்லையில் விசாரணை நடத்துகிறது கர்நாடகா போலீஸ்?
நெல்லை: பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகத்தின் நெல்லையில் கர்நாடகா போலீசார் விசாரணை நடத்தக் கூடும் என்று கூறப்படுகிறது.
பெங்களூரு சர்ச் சாலையில் கடந்த 28 ஆம் தேதி இரவு குண்டு வெடித்தது. இதில் கிறி்ஸ்துமஸ் பண்டிக்கைக்காக உறவினர்கள் வீடுகளுக்கு சென்றிருந்த சென்னையைச் சேர்ந்த பவானி என்ற பெண் பலியானார்.
பலர் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குண்டு வெடிப்பை நடத்தியவர்களை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த 13 ந் தேதி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்ததாக கொல்காத்தவை சேர்ந்த மென்பொறியாளர் மேதி கைது செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் ஆதரவு அமைப்புகள் தொடர் குண்டு வெடிப்பில் ஈடுபட போவதாக டிவிட்டர் மூலம் மிரட்டல் விடுத்தன.
இந்த நிலையில் கடந்த 2000ல் நடந்த பெங்களுரு குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களுக்கு கர்நாடக கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் குண்டு வெடிப்பில் ஈடுபட்டதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
2013 ஆம் ஆண்டு பெங்களுரு மல்லேஸ்வரம் பாஜக தலைமை அலுவலத்தில் வெடித்த அதே வகை குண்டுதான் தற்போது வெடித்தவை என கர்நாடக மற்றும் மத்திய உளவுத்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சிமி மற்றும் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பினர் இணைந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என தகவல் கிடைத்திருப்பதால் கர்நாடக உளவுத்துறையினர், தமிழக புலனாய்வு துறையினர், தேசிய புலனாய்வு துறையினர் ஆகியோர் இந்த அமைப்பினரை ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.
பெங்களூரு பாஜக அலுவலகத்தில் குண்டு வெடிப்பு நடந்த விசாரணையில் பழனி, கோவை, மதுரை, நெல்லையை சேர்ந்த தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த 10 தீவிரவாதிகளை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனால் இந்த பகுதியில் விசாரணை நடத்த கர்நாடக போலீசார் முடிவு எடுத்துள்ளனர். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.