தோட்டத்தில் உலவும் சிறுத்தை... பயத்தில் நெல்லை விவசாயிகள்!
நெல்லை: நெல்லை அருகே தோட்டத்தில் சிறுத்தை உலவி வருவதால் அங்கு பணிக்கு செல்லும் விவசாயிகள் பீதியில் உள்ளனர்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர், சிவகிரி, குற்றாலம், புளி்யங்குடி ஆகிய 4 மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளன. இங்கு 1 லட்சம் ஏக்கர் சந்தனம், தேக்கு உள்பட பல்வேறு அரிய வகை மரங்களும், மூலிகை செடிகளும் உள்ளன. மேலும் இங்கு யானை, கரடி, மான், சிறுத்தை, காட்டு மாடு, மிளா உள்ளிட்ட பல்வேறு விலங்குகளும் உள்ளன. இவைகளுக்கு போதுமான உணவுகள் கிடைக்காமலும், தண்ணீர் இல்லாமலும் விவசாய நிலங்களிலும் தஞ்சம் புகுவது வாடிக்கையாகி விட்டது.
இந்நிலையில் புளியங்குடி அருகேயுள்ள பச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பால்சாமி. அவரது உறவினர்களுக்கு சொந்தமான 10 ஏக்கர் தோட்டம் பனையூர் ரோட்டில் உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் காணப்படுவதாக பால்சாமி மற்றும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இதனால் அவர்கள் தோட்டத்திற்கு செல்லாமல் அச்சத்தில் உள்ளனர். சிறுத்தை பீதியால் அங்குள்ள சோளகாட்டில் களைகளை எடுப்பதற்கும் கூலி ஆட்கள் வர மறுப்பதாக கூறப்படுகிறது.
இந்த பகுதியை சேர்ந்த பக்கத்து கிராமங்களிலும் சிறுத்தை பயத்தால் பொதுமக்கள் இரவு நேரத்தில் வெளியே வரவே பயப்படுகின்றனர். இதுகுறி்த்து புளியங்குடி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் நடவடிககை எதுவும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் வனத்துறையினர் ஒரு சிலர் வந்து சிறுத்தை கால் தடத்தை ஆராய்ந்து சுற்று புறத்தில் சிறுத்தையை தேடி வருகின்றனர். இதனால் அந்த பகுதியினர் இன்னும் பயத்தில் உறைந்துள்ளனர்.