சவுதி சிறையில் கொலைக் குற்றவாளியாக கணவர்... மீட்டுத்தரக் கோரி நெல்லை கலெக்டரிடம் மனைவி மனு
நெல்லை: சவுதி அரேபிய சிறையில் வாடும் கணவரை மீட்கக்கோரி இளம்பெண் ஒருவர் நெல்லை கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.
செங்கோட்டையைச் சேர்ந்தவர் பவுசியா. இவர் நேற்று நெல்லை கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது :-
எனது கணவர் அப்துல்ரகுமான், சவுதி அரேபியாவில் உள்ள தமாமில் கடந்த 10 மாத காலமாக வேலை செய்துவந்தார். 2 மாதங்களுக்கு முன்பு தான் விடுமுறையில் ஊருக்கு வந்து மீண்டும் வெளிநாடு சென்றார். அங்கு அவரது நண்பர்கள் 10 பேருடன் இணைந்து அறையில் தங்கியிருந்தார். அவரது நண்பர்களில் ஒருவரை அடையாளம் தெரியாத நபர் யாரோ கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டனர். இந்த வழக்கில் போலீசார் எனது கணவர் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்தனர்.
இறுதியில் மற்றவர்களை விட்டுவிட்டு எனது கணவர் உட்பட 3 பேரை மட்டும் சிறையில் விசாரணை கைதியாக அடைத்துள்ளனர். இதனை தொலைபேசி மூலம் எனக்கு தெரிவித்தனர். இப்போது என் கணவர் நிலை என்னவென்று தெரியவில்லை. அவரை காப்பாற்றி மீட்டுத் தரவேண்டும்.
இவ்வாறு அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications