நெல்லித்தோப்பில் நாராயணசாமியை தோற்கடிக்க அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு கொடுத்த ரங்கசாமி
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் நாராயணசாமியை தோற்கடிப்பதற்காக அதிமுக வேட்பாளர் ஓம் சக்திசேகருக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிப்பதாக அக்கட்சித் தலைவர் ரங்கசாமி கூறியுள்ளார்.
சென்னை: எதிரியை வீழ்த்த எதிரியின் எதிரியை நண்பனாக்கிக் கொள் என்பதற்கு ஏற்ப நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நாராயணசாமியை வீழ்த்த அதிமுக வேட்பாளருக்கு என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
நாராயணசாமியை தோற்கடிப்பதற்காக அதிமுக வேட்பாளர் ஓம் சக்திசேகருக்கு என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது என அக்கட்சித் தலைவர் ரங்கசாமி கூறியுள்ளார். இந்த அறிவிப்பு புதுச்சேரி அரசியலில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது முதல்வராக பதவி வகித்து புதுச்சேரி காமராஜர் என்ற பெயர் எடுத்தவர் ரங்கசாமி. 2011ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார். பாஜக, அதிமுக கூட்டணியுடன் சேர்ந்து முதல்வர் பதவியில் அமர்ந்தார். அதிமுக உடனான கூட்டணி சில மாதங்களிலேயே உடைந்தது.
2016 சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. என்.ஆர் காங்கிரஸ் கட்சி எதிர்கட்சி வரிசையில் அமர்ந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி தேர்தலில் போட்டியிடாமல் நேரடியாக முதல்வர் பொறுப்பு ஏற்றார்.
6 மாதங்களுக்குள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்ற விதிப்படி, தற்போது நெல்லித்தோப்பு தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார் முதல்வர் நாராயணசாமி. நாராயணசாமியை தோற்கடிக்க அதிமுக, பாஜக, பாமக என பல கட்சிகளும் வியூகம் அமைத்துள்ளன. அதிமுக வேட்பாளராக ஓம்சக்தி சேகர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஓம்சக்தி சேகர் கடந்த வாரமே வேட்புமனு தாக்கல் செய்து விட்டு முழு வீச்சில் பிரச்சாரம் செய்து வருகிறார். என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வெளிப்படையாகவே நிர்வாகக்குழு கூட்டத்தில் அதிமுக ஆதரவு கேட்டால் ஆதரவு கொடுப்போம். அதற்காக காத்து இருக்கிறோம் என்று கூறினார். சொன்னது போலவே இன்று அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகருக்கு ஆதரவு அளிக்கப் போவதாகவும், நாராயணசாமியை தோற்கடிக்க முழு வீச்சில் நெல்லித்தோப்பு தொகுதியில் பிரச்சாரம் செய்யப் போவதாகவும் கூறியுள்ளார் ரங்கசாமி.
புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரங்கசாமி, இந்த இடைத்தேர்தல் மக்களின் மீது திணிக்கப்பட்ட ஒன்று என்று கூறினார். தற்போது இந்த இடைத்தேர்தல் நடைபெறுவதற்கான அவசியம் என்ன வந்தது என்று கேள்வி எழுப்பிய அவர், ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சி அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாக கூறினார்.
பணபலம், ஆள்பலத்தை கொண்டு ஆளும் காங்கிரஸ் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாகவும் என். ஆர். ரங்கசாமி கூறினார். ரங்கசாமியை தோற்கடிக்கவே, அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகருக்கு ஆதரவு அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எங்கள் பொது எதிரி நாராயணசாமியை வீழ்த்தத்தான் எங்கள் கூட்டணி உருவெடுத்துள்ளது என்றும் என்.ஆர். ரங்கசாமி கூறியுள்ளார். என்ஆர் ரங்கசாமியின் அறிவிப்பு புதுவை அரசியலில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications