இன்று சென்னையில் பிறக்கும் ‘தேவதை’களுக்கு ரூ 10,000 பரிசு: மாநகராட்சி அறிவிப்பு
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 66வது பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி, இன்று பிறக்கும் பெண் குழந்தைகள் பெயரில் ரூபாய் பத்தாயிரம் வைப்பு நிதி செய்யப் படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 66வது பிறந்தநாள். இதனை அதிமுகவினர் கோலாகலமாகக் கொண்டாட்டி வருகின்றனர். இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கு இன்று சென்னையில் வைத்து பெண் குழந்தை பிறந்தால், அக்குழந்தை பெயரில் ரூ 10 ஆயிரம் வைப்புநிதி செய்யப் படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
அதேபோல், இந்தப் பரிசானது கடந்த கடந்த 24-2-2012 மற்றும் 24-2-2013 ஆகிய நாட்களில் சென்னை மாநகரில் பிறந்த பெண் குழந்தைகளுக்கும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேற்கண்ட பரிசு தொகையினை பெறுவதற்கு உரிய பிறப்பு சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றுடன் நாளை ( 25-2-2014) மாலை 5 மணிக்குள் சென்னை மாநகராட்சியின் பொது சுகாதார துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.