தமிழகத்தில் மீண்டும் கனமழை தொடரும்... பின் படிப்படியாக குறையும்: மிரட்டும் ரமணன்
சென்னை: இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களில் படிப்படியாக மழை குறையும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார்.
வங்க கடலில் கடந்த வாரம் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை கொட்டியது. இந்த நிலையில் அவ்வப்போது புதிதாக உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வுநிலையால் தினந்தோறும் கனமழை கொட்டிவருவதால் தமிழகமே வெள்ளக்காடக மாறியுள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு நிலை
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரமணன், இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறினார். மாலத்தீவு அருகே மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை மறைந்து விட்டது என்றார் ரமணன்.
சராசரியை விட கூடுதல்
தமிழகத்தில் இதுவரை சராசரியாக 48 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இது சராசரியை விட கூடுதல் என்று கூறியுள்ள ரமணன், தமிழகத்தின் மழை சராசரி 44 செ.மீ. தான். ஆனால் இன்று வரை 48 செ.மீ. அதாவது சென்னையில் கூடுதலாக 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று தெரிவித்தார்.
சென்னையில் 114 செ.மீ மழை
அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று வரை சென்னையில் 114 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஆனால், சென்னையின் மழை சராசரி 79 செ.மீ. தான். மூன்று மாத கால மழை அளவு இயல்பைக் காட்டிலும் கூடுதல்தான். ஆனால் இது டிசம்பர் மாதம் வரை கணக்கிடும் போது தான் இறுதியான சராசரி தெரிய வரும். இதுபோல கடந்த 2005ம் ஆண்டு கன மழை பெய்துள்ளது என்றும் ரமணன் கூறினார்.
4 மணிநேரத்தில் மழை
நேற்று அதிகபட்சமாக பாபநாசத்தில் 18 செ.மீ மழையும், தாம்பரத்தில் 17.செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. அண்ணாபல்கலைக்கழகம் பகுதியில் 16 செ.மீ அளவு மழை அளவு பதிவானதாக ரமணன் தெரிவித்தார்.
மழை குறையும்
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வரும் 24 மணி நேரத்தில் அநேக இடங்களிலும், அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களிலும், அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மிக ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்யும் என்றும், தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும் என்றும் ரமணன் கூறியுள்ளார்.சென்னையை பொறுத்த வரை ஓரளவுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலையில் மழை பெய்யும் என்று கூறினார்.