தேர்தல் நேரத்தில் நாங்கள் முன்னணி கட்சியாக விளங்குவோம்: ஜி.கே.வாசன் நம்பிக்கை
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் நேரத்தில் தங்களது கட்சி முன்னணி கட்சியாக விளங்கும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்.
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய ஜி.கே.வாசன், புதிய கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ளார். தனது கட்சியின் பெயர், கொடி மற்றும் சின்னம் உள்ளிட்ட விவரங்களை திருச்சி பொதுக்கூட்டத்தில் அறிவிப்பதாக அவர் கூறியிருக்கிறார்.
இந்நிலையில், ஜி.கே.வாசனை சந்தித்து பல்வேறு தரப்பினரும் சந்தித்து தங்களது ஆதரவுகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், இன்று சில வர்த்தக பிரமுகர்கள் ஜி.கே.வாசனை சந்தித்தனர். அப்போது வர்த்தக காங்கிரஸ் நிறுவனர் ஆர்.எஸ்.முத்து, முக்தா சீனிவாசன், ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ், சைதை ரவி, இ.சி.சேகர் உள்பட பலர் உடனிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே.வாசன் கூறியதாவது :-
புதிய கட்சி...
எங்கள் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகிறது. 28-ந்தேதி திருச்சியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கட்சி பெயர், கொடி, சின்னம் அறிவிக்கப்படும்.
ஆதரவு...
எங்களை தொடர்பு கொண்டு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். கட்சி பெயர் அறிவிப்பு விழாவுக்கு பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரபலங்களையும் சந்தித்து ஆதரவு திரட்டுவேன்.
முன்னணி கட்சியாகும்...
தேர்தல் நேரத்தில் எங்கள் கட்சி முன்னணி கட்சியாக விளங்கும்.
மெத்தனம் கூடாது...
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இலங்கை சிறையில் வாடும் 5 தமிழக மீனவர்களையும் நிபந்தனை இல்லாமல் விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விசயத்தில் மத்திய, மாநில அரசுகள் மெத்தனம் காட்ட கூடாது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.