இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு : கோவையில் 5 இடங்களில் என் ஐ ஏ சோதனை
இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்குத் தொடர்பாக கோவையில் 5 இடங்களில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
கோவை: கோவையில் இந்து முன்னணிப் பிரமுகர் சசிக்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 5 பேரின் வீடுகளில் தேசிய புலனாய்வு ஏஜென்ஸியான என் ஐ ஏ சோதனை நடத்தி வருகிறது.
கோவையில் இந்து முன்னணி அமைப்பின் செய்தித் தொடர்பாளராக இருந்து சசிக்குமார் என்பவர் கடந்த 2016ம் ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்படார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி, கோவையைச் சேர்ந்த சதாம், அபுதாஹிர், முபாரக் மற்றும் சுபேர் ஆகிய 4 பேரை கைது செய்தது. இந்த வழக்கை தேசிய புலனாய்வு ஏஜென்ஸியான என் ஐ ஏ தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது.
இதில், என் ஐ ஏ அதிகாரிகள் பலகட்ட விசாரணை நடத்திய நிலையில், இன்று காலை 4.30 மணி முதல் கோவையில் அரஸ், அஜீஸ், விபின் ரகுமான், முகமது அலி மற்றும் சதாம் உசேன் ஆகிய 5 பேரின் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர். 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 5 குழுக்களாகப் பிரிந்து இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள்.

இதில், வீடுகளில் உள்ள கணிணிகள், மடிக்கணிணிகள், செல்போன்கள் உள்ளிட்டவற்றை தொடர்ந்து அவர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுவிடாமல் தடுக்க காவல்துறை உதவியுடன் சோதனை நடந்து வருகிறது.
முன்னதாக, இந்த வழக்கில் தன்னை என் ஐ ஏ அதிகாரிகள் சிக்கவைக்கப் பார்ப்பதாக விபின் ரகுமான் கடந்த வாரம் கோவை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications