ஆட்டம் போடாம அடங்குறீங்களா? 'சசிகலா அண்டு கோ'வை பார்த்து சீறுவது யார் தெரியுமா?
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது தலை நிமிரவே பயந்தவர்கள், இன்று எதிர்த்து பேசுவதையும், ஆட்டம் போடுவதையும் என்னால் ஏற்கமுடியாது என்று அதிமுக நட்சத்திர பேச்சாளர் நிர்மலா பெரியசாமி தெரிவித்தார்.
சென்னை: ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை பேசவே பயந்த சிலர் இன்று ஆட்டம் போடுவதை என்னால் சகித்துக் கொள்ள முடியாது என்று அதிமுக நட்சத்திர பேச்சாளர் நிர்மலா பெரியசாமி ஆவேசத்துடன் தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரண்டாக பிளவுபட்டது. இதைத் தொடர்ந்து சசிகலா அணியினர் தனியாக பயணித்து வந்தனர். அவர்களது அணியில் இருந்து ஒவ்வொருவராக கிளம்பி ஓபிஎஸ் அணியிடம் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
அந்த வகையில் ஜெயலலிதாவால் ஈர்க்கப்பட்டு அதிமுக இணைந்து நட்சத்திர பேச்சாளரான நிர்மலா பெரியசாமியும் அந்த மூதேவி(யர்)களுடன் சண்டையிட்டு கொண்டு ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு வந்து விட்டார்.
சொல்வதெல்லாம் உண்மைங்க
அப்போது அவர் பேசுகையில், உண்மையிலேயே மனநிறைவுடன் அண்ணன் ஓபிஎஸ் அணிக்கு வந்துள்ளேன். யாரென்றே தெரியாதவர்கள் எல்லாம் இன்று போயஸ் தோட்டத்தில் ஆட்டம் போட்டு வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் களம் இறங்கும் அண்ணன் மதுசூதனன் நிச்சயம் மாபெரும் வெற்றி பெறுவார்.
சொந்த தொகுதியில் தோற்ற...
கடந்த சட்டசபை தேர்தலில் ப.வளர்மதி சொந்த தொகுதியான ஆயிரம் விளக்கு தொகுதியிலும், சி.ஆர்.சரஸ்வதி பல்லாவரம் தொகுதியிலும் கோகுல இந்திரா அண்ணாநகர் தொகுதியிலும் தோற்று போயினர். சொந்த தொகுதியை தக்க வச்சுக்க வக்கில்லாத இந்த பெண்மணிகள் என்னை கட்சியிலிருந்து வெளியேறு என்று கூறுகின்றனர்.
3 சகாப்தம்
நான் ஜெயலலிதாவால் அரசியலுக்கு வந்தேன். அவரால் பரிவோடும், பாசத்தோடும் வளர்க்கப்பட்டு கட்சி பணியாற்றினேன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் இரட்டை இலை எனும் 3 சகாப்தங்கள் தான் அதிமுகவின் ஆணிவேர். அந்த ஆணிவேரை பிடுங்க சிலர் ஆட்டம் போட்டு வருகின்றனர்.
நினைவு இல்லம்
சம்பந்தமே இல்லாதவர்கள் போயஸ் தோட்டத்தில் தங்கியிருந்து ஆட்டம் போடுகின்றனர். இவர்களின் ஆட்டத்தை என்னால் சகித்து கொள்ள முடியாது. அவர்களை அங்கிருந்து விரட்டியடித்து விட்டு ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும்.
மர்மமுடிச்சுகள்..
ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்கள் அவிழ்க்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் நான் உள்பட அதிமுக உண்மைவிசுவாசிகளும் வேதனையுடன் காத்திருக்கிறோம். தற்போது அங்குள்ள 90 சதவீதம் பேர் மன புழுக்கத்தில் தான் உள்ளனர். இன்னும் நிறைய பேர் இங்கு வருவார்கள் என்றார் நிர்மலா பெரியசாமி.
சோகம்
உண்மையிலேயே ஜெயலலிதா மறைந்தபோது சோகமே உருவாக இருந்தவர்கள் பாத்திமா பாபுவும், நிர்மலா பெரியசாமியும்தான் என்கிறார்கள் அதிமுக தொண்டர்கள். ஓபிஎஸ்ஸும் கதறி அழுதுள்ளார். அந்த வீடியோக்கள் வைரலாகி உள்ளன. "மக்களுக்கு ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசி யார் என்பது தெரியும். ஜெயலலிதா சிறையில் இருந்தபோது அமைச்சர்களாக பதவியேற்றபோது விம்மி விம்மி அழுத சிலர் ஜெயலலிதா மறைவின்போது எப்படி இருந்தார்கள் என்பது ஊருக்கே தெரியும்" என்று ஆவேசப்படுகிறார்கள் ஓ.பி.எஸ் அணி நிர்வாகிகள் சிலர்.