ஜார்கண்ட்டில் மதுவிலக்கு பிரசாரத்தை தொடங்கி வைத்தார் நிதிஷ்குமார்
தன்பாத்: பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் ஜார்கண்ட் மாநிலத்தில் மதுவிலக்கு பிரச்சாரத்தை நேற்று தொடங்கி வைத்தார்.
பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்த நிதிஷ்குமார், தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல், மாநிலம் முழுவதும் முழு மதுவிலக்கை அமல்படுத்தியுள்ளார். இதற்கு முக்கிய காரணமான முதல்வர் நிதிஷ்குமாருக்கு நாடு முழுவதிலும் ஆதரவு பெருகி வருகிறது.
பீகாரில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதன் அண்டை மாநிலமான ஜார்க்கண்ட் எல்லையில் புதிய மதுக்கடைகள் திறக்கப்படுவதாகப் புகார் எழுந்தது. இந்நிலையில், பீகார் எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தின் தன்பாத் பகுதியில் நடைபெற்ற மதுவிலக்கு பிரசாரக் கூட்டத்தில் நிதீஷ் குமார் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், பீகாரில் மதுவிலக்கை அமல்படுத்தியதைத் தொடர்ந்து வேறு மாநிலங்களிலும் அதுதொடர்பான பிரசாரங்களை மேற்கொள்ளுமாறு எனக்கு அழைப்புகள் வருகின்றன. அவற்றை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன்.
மேலும், பீகார் எல்லையை ஒட்டியுள்ள ஜார்க்கண்ட் மாநிலப் பகுதிகளில் அம்மாநில அரசு மதுக்கடைகளை அதிகப்படுத்துவதாக குற்றம்சாட்டினார். இது சட்டவிரோத நடவடிக்கையாகும். பொதுவாக மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலத்தின் எல்லையை ஒட்டி பிற மாநில அரசுகள் மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது.
பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு பிரச்சாரத்தை தொடங்கியதற்கு தற்போது பலன் கிடைத்துள்ளதாகவும், அதேபோல் மற்ற மாநிலங்களிலும், நாடு முழுவதும் இது பரவட்டும் என்றார்.