இது தமிழக சட்டசபைதானா? ஆளுநர் உரையை எதிர்கட்சிகள் புறக்கணிக்கலையே?
சென்னை: சட்டசபை என்றாலே எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்வது சகஜமான விசயம்தான். அதுவும் ஆளுநர் உரையை கண்டிப்பாக புறக்கணிப்பார்கள். பட்ஜெட் உரையை புறக்கணிப்பார்கள். சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாக கூறி வெளிநடப்பு செய்வார்கள் எதிர்கட்சி உறுப்பினர்கள்.
இன்றைக்கு தமிழக சட்டசபை மிகவும் அமைதியாகவும், எந்த வித கூச்சல் குழப்பமோ ஆளுநர் உரை புறக்கணிப்போ இன்றி நடைபெற்றது.
தமிழக அரசையும் முதல்வர் ஜெயலலிதாவையும் பாராட்டி ஆளுநர் உரை வாசித்த போது அதிமுக உறுப்பினர்கள் மேஜைகளை தட்டி வரவேற்பு தெரிவித்தனர். அதே நேரத்தில் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் உட்பட திமுக உறுப்பினர், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரும் அமைதியாக அமர்ந்திருந்து ஆளுநர் உரையை கவனித்தனர்.
அதிமுகவினர் கூறுவதை விட அதிகம் அம்மா என்ற வார்த்தைகள் ஆளுநர் உரையில் இருந்தாலும், அதை கேட்டு ஆளும் கட்சி உறுப்பினர்கள் கை வலிக்க வலிக்க பெஞ்ச் தட்டினாலும் எந்த சலனமும் இன்றி எதிர்கட்சித்தலைவரும் உறுப்பினர்களும் அமர்ந்திருந்தனர்.
வேணும்னே நம்மளை வெறுப்பேத்த தட்டுவாங்க... நாம வெளிநடப்பு செய்யக்கூடாது என்று நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்தது போலவே எதிர்கட்சியினர் அமைதியாக அவையில் அமர்ந்து ஆளுநர் உரையை கவனித்தனர்.
அவைக்கு வெளியே வந்த ஸ்டாலின், செய்தியாளர்களிடம் பேசும் போது தனக்கே உரிய பாணியில், இது ஆளுநர் உரை என்பதை விட அம்மா கால அட்டவணை என்றே கூறலாம் என்று 'நச்' கமெண்ட் அடித்தார். ஆளுநர் உரையில் மக்களுக்கான எந்த திட்டங்களும் இடம் பெறவில்லை என்றும் சாடியுள்ளார் ஸ்டாலின்.
எதிர்கட்சியாக மட்டுமே செயல்படுவோம், எதிர்கட்சியாக அல்ல என்று சபாநாயகர் தேர்தலின் போது ஸ்டாலின் கூறியதை கடைபிடிக்கத் தொடங்கியுள்ளார்.
தமிழக சட்டசபையில் ஆளுங்கட்சியினரும் எதிர்கட்சியினரும் இதே போக்கை கடைபிடித்தால் அது மிகப்பெரிய மாற்றமாகவே இருக்கும். மக்கள் நலப்பிரச்சினைகள் குறித்து காரசாரமான சுவாரஸ்யமான விவாதங்கள் நடைபெறும் என்பதில் சந்தேகமில்லை.
வெளிநடப்பு அதிகம் நடைபெறாவிட்டால் சட்டசபையில் கேட்டீன்காரருக்குத்தான் நஷ்டம். அதனாலென்ன மக்களுக்கு லாபம்தானே?