திராவிட இயக்கம் இல்லாவிட்டால் கல்வி கிடைத்திருக்காது; மறுமலர்ச்சியும் ஏற்பட்டிருக்காது: ஸ்டாலின்
சென்னை: திராவிட இயக்கம் தோன்றியிருக்காவிட்டால் கல்வியும் கிடைத்திருக்காது, மறுமலர்ச்சியும் ஏற்பட்டிருக்காது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடியின் சகோதரர் டாக்டர் தியாகராஜன்-டாக்டர் பத்மினி தியாகராஜன் ஆகியோரின் மகன் டாக்டர் திலீபனுக்கும் கே.வி.ஆர்.பாலாஜி- கிருஷ்ணவேணி ஆகியோரின் மகள் டாக்டர் சிந்துவுக்கும் விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நேற்று திருமணம் நடைபெற்றது.
விழாவில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து அவர் பேசியபோது :-

தமிழ்த் திருமணம்....
இது நம்முடைய கழக குடும்பத்தில் நடைபெறுகிற திருமணம். பேரறிஞர் அண்ணா இந்த இயக்கத்தை குடும்ப பாச உணர்வோடு உருவாக்கி தந்தார். இந்த திருமணம் காதல் திருமணமாகவோ, கலப்பு திருமணமாகவோ இல்லாமல் சீர்திருத்த திருமணமாக நடைபெறுகிறது. இது சுய மரியாதை திருமணம் மட்டுமல்ல, தமிழ் திருமணமாகவும் நடைபெறுகிறது.

மகிழ்ச்சி....
தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுக் கொடுத்தவர் தலைவர் கலைஞர். அந்த தமிழ் மொழியில் நடைபெறுகிற திருமணத்தில் நான் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியதில் மகிழ்ச்சியடைகிறேன்.

கல்விக்கு திமுக தான் காரணம்...
இந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் கல்வி கற்று, பட்டதாரிகளாக, மருத்துவர்களாக உள்ளனர் என்றால் இதற்கெல்லாம் காரணம் திராவிட இயக்க தலைவர்கள் தான். திராவிட இயக்கம் தோன்றியிருக்கா விட்டால் கல்வியும் கிடைத்திருக்காது. இந்த மறுமலர்ச்சியும் ஏற்பட்டிருக்காது.

தீர்மானங்கள்...
1929-ல் செங்கல்பட்டில் நடந்த சீர்திருத்த மாநாட்டில் பெண்களின் உரிமையை நிலைநாட்ட பல தீர்மானங்களை தந்தை பெரியார் நிறைவேற்றினார். அந்த தீர்மானங்களை பேரறிஞர் அண்ணாவும், அவர் வழியில் வந்த தலைவர் கலைஞரும் நிறைவேற்றினார்கள்.

பெண்களுக்கான உரிமைகள்...
இதனால் இன்றைக்கு பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு போன்ற உரிமைகளை பெற்றுள்ளனர்.

கொடுமையான ஆட்சி...
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின், இந்த 3 ஆண்டு காலத்தில் நாடு எவ்வளவோ கொடுமைகளை சந்தித்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். இந்த நாட்டை காப்பாற்ற, வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறத்தக்க வகையில் கடினமாக உழைக்க வேண்டும் என்று சபதம் ஏற்க வேண்டும்.

மணமக்களுக்கு வாழ்த்து...
தந்தை பெரியார் கண்ட கனவான சமத்துவ புரத்திற்கே தடைபோட்டது அ.தி.மு.க. ஆட்சி, சாதி, மத சார்பற்ற நிலையில் இந்த நாடு திகழ வருகிற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற வேண்டும். இந்த மணமக்கள் வீட்டுக்கு விளக்காய், நாட்டுக்கு தொண்டர்களாய் வாழ வாழ்த்துகிறேன்''எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications