சென்னையில் வெள்ளம் ஏற்படுமோ என்று அஞ்சவேண்டாம்- வெதர்மேன்
சென்னையில் வெள்ளம் ஏற்படுமோ என்று அஞ்சவேண்டாம். இடைவெளி விட்டு விட்டே மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
சென்னை: சென்னையில் இன்று நாள் முழுவதும் இடைவெளி விட்டுவிட்டு மழை பெய்யும் என வானிலை ஆர்வலரும் பதிவருமான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதீப் ஜான், சென்னை மற்றும் டெல்டா பகுதிகளில் இன்றைய மழை நிலவரம். சென்னையில் அடுத்தடுத்த மழைதர மேகக்கூட்டங்கள் ஆயத்தமாக இருக்கின்றன. அடுத்த 20 நிமிடங்களுக்கு மழை பெய்யும். அதன்பின்னர் சிறிய இடைவெளிவிட்டு மீண்டும் மழை பெய்யும்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்னதாக நவம்பர் 6,7 தேதிகள் நல்ல மழை பெய்யும் எனக் கூறியிருந்தேன். ஆனால், அப்போது அவ்வளவு உறுதியாக அதைக் கூறமுடியவில்லை. ஆனால், அது நடந்துவிட்டது.
இருப்பினும் வெள்ளம் ஏற்படுமோ என்று அஞ்சவேண்டாம். இடைவெளி விட்டுவிட்டே மழை பெய்யும் என்று கூறியுள்ளார்.
டெல்டா மாவட்டங்களிலும் அதிக மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. கடலூர் இன்றைய தினத்தின் பின்பகுதியில் அதிக மழை பெய்யும். மத்திய தமிழகம், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் இன்னும் சற்று நேரத்தில் மழை பெய்யத் தொடங்கும் என்றும் வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.