இனி "மாண்புமிகு ஆளுநர்" என்றே அழைக்க வேண்டும்.. வித்யாசாகர் ராவ் உத்தரவு #governor
சென்னை: தமிழகை ஆளுநரை இனி மாண்புமிகு என்று அழைக்க வேண்டும் என்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளதாக ராஜ்பவன் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் குடியரசுத் தலைவரையும், அவரது பிரதிநிதியாக கருதப்படும் ஆளுநரையும் His Excellency என்று அழைப்பது வழக்கம். அதாவது மேதகு என்று தமிழில் அழைப்பர். முதல்வர், அமைச்சர்களை மாண்புமிகு Honourable என்று அழைப்பது வழக்கம்.
ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட் பதங்கள் இவை. இதில் மேதகு வார்த்தையை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2012ம் ஆண்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இதற்கு முற்றுப் புள்ளி வைத்து உத்தரவிட்டார். அவர் பிறப்பித்த உத்தரவில், குடியரசுத் தலைவர், ஆளுநர் உள்ளிட்ட உயர் பதவி வகிப்போரை மேதகு என்ற வார்த்தையால் அழைப்பது வழக்கம். இனி இந்த வார்த்தையை உள்நாட்டு நிகழ்ச்சிகளிலோ, உள்நாட்டு தலைவர்களுடனான சந்திப்புகளின்போதோ பயன்படுத்தக்கூடாது.
இத்தகைய நிகழ்ச்சிகளில், இந்தியில், "மகாமகின்" என்ற வார்த்தைக்கு பதிலாக ராஷ்டிரபதி "மகோதாய்" என்ற வார்த்தையை (மாண்புமிகு) பயன்படுத்த வேண்டும். இருப்பினும், மேதகு என்பதை வெளிநாட்டு தலைவர்களுடனான சந்திப்பின்போது மட்டும் பயன்படுத்தலாம்.
இனி "மாண்புமிகு ஆளுநர்" என்றே அழைக்க வேண்டும்.. வித்யாசாகர் ராவ் உத்தரவு #governor pic.twitter.com/R4uhyfFfKf
— Oneindia Tamil (@thatsTamil) October 23, 2016
குடியரசுத் தலைவர், ஆளுநர் பதவிகளுக்கு முன்பாக மாண்புமிகு என்ற வார்த்தையையும், பெயருக்கு முன்பாக, இந்திய பாரம்பரியப்படி, ஸ்ரீ என்றோ, ஸ்ரீமதி என்றோ குறிப்பிட வேண்டும். மேலும், அரசு குறிப்புகளில், மகாமகின் என்ற வார்த்தைக்கு பதிலாக ராஷ்டிரபதி ஜி என்று பயன்படுத்தப்படும். இதேபோல் தாம் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை கூடுமானவரை குடியரசுத் தலைவர் மாளிகையிலேயே நடத்துமாறும் பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டிருந்தார்.
தற்போது இந்த உத்தரவை தமிழக ஆளுநர் மாளிகை அமலுக்குக் கொண்டு வந்துள்ளது. இதுதொடர்பாக ராஜ்பவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இனிமல் ஆளுநரா மேதகு என்று அழைப்பதற்குப் பதில் மாண்புமிகு என்றுதான் அழைக்க வேண்டும். அரசு நிகழ்ச்சிகளிலும், கோப்புகளிலும் மாண்புமிகு ஆளுநர் என்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். வெளிநாட்டுப் பிரமுகர்களுடனான நிகழ்ச்சிகளின்போது மேதகு என்று அழைக்கலாம் என்று பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் குடியரசுத் தலைவர் கடந்த 2012ல் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் அதை இத்தனை காலமாக விட்டு விட்டு இப்போது திடீரென ஆளுநர் மாளிகை அறிவித்திருப்பதுதான் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.