வாசனுக்கு வார்னிங்கா..? இனிமேல் எந்த கட்சிக்கும் கூட்டணியில் இடமில்லை: ஸ்டாலின் திட்டவட்டம்
சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதோடு சேர்த்து கூட்டணி கட்சிளுக்கு மொத்தம் 54 தொகுதிகள் பகிர்ந்து தரப்பட்டுள்ள நிலையில், இனிமேல் திமுக கூட்டணியில் சேர வேறு கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படாது என்று கட்சி பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி மற்றும் காங்கிரஸ் மேலிட தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் நடுவே தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம் இன்று நிறைவேறியது.
கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு 63 தொகுதிகள் வழங்கிய திமுக, இம்முறை அதை 41 என குறைத்து வழங்கியுள்ளது.

வேறு கட்சி வேண்டாம்
இந்த சந்திப்புக்கு பிறகு நிருபர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது: அதிமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற திமுக கூட்டணியால்தான் முடியும். திமுக கூட்டணியில் இனி வேறு கட்சிகளுக்கு இடமில்லை.

இன்று மாலை பேச்சு
காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவது என்று இரு கட்சியின் குழுவினரும் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

54 தொகுதிகள் கூட்டணிக்கு
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சி 5 தொகுதிகள், இதர கட்சிகளுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுக அதிக தொகுதிகளில்
காங்கிரஸ் கட்சியையும் சேர்த்து கூட்டணி கட்சிகளுக்கு 54 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. மீதமுள்ள 180 தொகுதிகளில் திமுக போட்டியிடலாம் என்று தெரிகிறது.

வாசனுக்கு எச்சரிக்கை?
அதிமுகவின் கதவுகள் பூட்டப்பட்டுள்ள நிலையில், தேமுதிக தனது தொகுதிகளை விட்டுத்தராத சிக்கலில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, எந்த கூட்டணிக்கு செல்வது என புரியாமல் இன்னமும் குழம்பிக் கொண்டுள்ளது., வாசன் திமுக பக்கம் சீக்கிரம் வர வேண்டும் என்பதற்காக ஸ்டாலின் இவ்வாறு பேட்டியளித்திருக்க வாய்ப்புள்ளதாக கருதுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.












Click it and Unblock the Notifications