90 வயது தந்தையைப் பார்க்கச் செல்ல நளினிக்கு பரோல் தர மறுத்த அதிமுக அரசு...!
சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக உள்ள நளினிக்கு கடந்த வாரம்தான் பரோல் தர தமிழக அரசு மறுத்திருந்தது. இருப்பினும் தற்போது மற்ற 6 பேருடன் சேர்த்து அவரையும் விடுவிக்க தமிழக அரசு முன்வந்திருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்ட நளினி மற்றும் ஜெயக்குமார், ராபடர்ட் பயஸ், ரவிச்சந்திரன் மற்றும் சமீபத்தில் உச்சநீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையாக தண்டனை குறைக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை விடுவிக்க முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்து சட்டசபையில் அறிவித்தார்.
ஆனால் இதே நளினி கடந்த வாரத்தில் பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால் அதை சிறைத்துறை நிராகரித்திருந்தது என்பது முரண்டாபாடாக பார்க்கப்படுகிறது. நளினி ஒரு மாத காலம் பரோல் கேட்டு கோர்ட்டை அணுகியிருந்தார். ஆனால் அவர் பரோலில் வெளியே போனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று காவல்துறையும், சிறைத்துறையும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தன.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. நளினி தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது மரண தண்டனை கடந்த 2000மாவது ஆண்டு ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தியின் தலையீட்டின் பேரில் தமிழக ஆளுநரால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
நளினியின் 90 வயது தந்தை நெல்லை மாவட்டம் அம்பலவாணபுரம் பகுதியில் வசித்து வருகிறார். அவரைப் பார்க்கவே பரோல் கேட்டிருந்தார் நளினி. 9 ஆண்டுகளுக்கு முன்பு அவரது சகோதரர் திருமணத்திற்காக 3 நாள் பரோலில் போயிருந்தார். அதன் பிறகு அவர் பரோலில் வெளியே வந்ததில்லை என்பது நினைவிருக்கலாம்.