தேமுதிக உடன் கூட்டணியா? யார் சொன்னது? கேட்பது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
சென்னை: தேமுதிக உடன் நிச்சயம் கூட்டணி கிடையாது என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
2016 சட்டசபை தேர்தலுக்காக தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அரசியல் வானில் புதுப்புது நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. மதுவிலக்கு போராட்டத்தில் கைதான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
அதேபோல மனித சங்கிலி போராட்டம் நடத்தி கைதான விஜயகாந்துக்கு ஆதரவாகவும், தமிழக அரசைக் கண்டித்தும் அறிக்கை வெளியிட்டார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். ஒருவேளை சட்டசபை தேர்தலில் கூட்டணிக்காக அச்சாரமாக இந்த சந்திப்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
பூரண மதுவிலக்கு
காங்கிரஸ் கட்சியின் கொள்கையே மதுவிலக்கு கொண்டு வருவது தான். நாங்கள் தற்போது கேரளாவில் மதுவிலக்கை கொஞ்சம் கொஞ்சமாக அமல்படுத்தி வருகிறோம். கர்நாடகாவிலும் விரைவில் அமல்படுத்த இருக்கிறோம். தமிழகத்தில் அதற்காக போராட்டம் நடத்தி வருகிறோம் என்றார்.
தேமுதிக உடன் கூட்டணி
தே.மு.தி.க.வும், காங்கிரசும் ஒரே கருத்தை மையமாக கொண்டு போராட்டம் நடத்தி வருகிறோம். அதன் அடிப்படையில் கொள்கைக்காக நாங்கள் ஒருவருக்கொருவர் முன்னிற்கிறோம் என்பதை தெரிவிக்கும் வகையில் சந்திக்கிறோம். அதற்காக இதை கூட்டணி என்று சொல்ல முடியுமா?. நிச்சயமாக இல்லை.
ராகுல்காந்தி கடிதம்
காந்தியவாதி சசிபெருமாள் மறைவு குறித்து அறிந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அவரது மகனுக்கு இரங்கல் கடிதம் அனுப்பியுள்ளார். சசிபெருமாள் குடும்பத்துக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். சசிபெருமாளின் மரணத்தை தமிழக அரசு கொச்சைப் படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
40 பேர் விடுவிப்பு
இலங்கை அரசால் கைது செய்யப்பட்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 40 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விசைப்படகுகளும் விடுவிக்கப்பட வேண்டும்.
மாநில தகவல் ஆணையம்
மாநில தகவல் ஆணையத்தின் முதன்மை ஆணையராக கே.ராமானுஜமும் ஆணையர்களாக முன்னாள் நீதிபதி தட்சிணாமூர்த்தி மற்றும் அதிமுக சார்பில் 2004 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது.
உண்ணாவிரதம்
பூரண மதுவிலக்கை வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் தமிழகம் முழுவதும் 13, 14 தேதிகளில் உண்ணாவிரதம் நடத்தவுள்ளோம். அதற்கு காவல்துறை அனுமதி மறுத்தால், தடையை மீறி உண்ணாவிரதம் இருப்போம்.
தனித்து போட்டி
மதுவிலக்குக்காக போராடிய தேமுதிக தலைவர் விஜயகாந்தை கூட்டணிக்காக சந்திக்கவில்லை. கூட்டணி குறித்து பின்னர்தான் முடிவு செய்யப்படும். தமிழகத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு 150 இடங்களை பிடிக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்று கூறியுள்ளார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்