“வீட்டு சுவர் ஓரத்தில் ரத்தம்.. தோண்டிப் பார்த்தா..” கழுத்தை அறுத்து கொடூரமா - போலீசார் ஷாக்!
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே வீட்டில் டைல்ஸ் பதிக்கும் வேலை செய்ய வந்த வடமாநில இளைஞர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் அருகே மண்ணில் இருந்து ரத்தம் வெளியேறி உறைந்து கிடந்ததைப் பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உளுந்தூர்பேட்டையில் வடமாநில இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வட மாநில இளைஞர்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் அதே ஊரில் தனக்குச் சொந்தமான இடத்தில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.
ரமேஷின் வீட்டிற்கு டைல்ஸ் பதிக்கும் வேலை செய்வதற்காக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை சேத்தியாத்தோப்பில் இருந்து அழைத்து வந்துள்ளார். இவர்கள் கட்டப்பட்டு வரும் வீட்டின் மாடியில் தங்கியிருந்து வேலை செய்து வந்தனர்.
ஊர் திரும்பிய இளைஞர்கள்
மூன்று இளைஞர்களில் ஒருவர் மட்டும் கடந்த 4 நாட்களுக்கு முன் தன் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளார். மீதமிருந்த இருவரும் அவரது வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கட்டப்பட்டு வரும் வீட்டின் முன்பக்க காம்பவுண்டு சுவர் அருகே மண்ணில் இருந்து ரத்தம் வெளியேறி உறைந்து கிடப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உளுந்தூர்பேட்டை போலீசாரிடம் தெரிவித்தனர்.
இளைஞர் கொடூர கொலை
இதையடுத்து உடனடியாக அங்கு வந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் தலைமையிலான போலீசார் ரத்தம் உறைந்து கிடந்த இடத்தை தாசில்தார் கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் தோண்டிப் பார்த்தனர்.
அதில், வடமாநில இளைஞர்களில் ஒருவரான பவன் குமார் (22) என்பவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது தெரியவந்தது. அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தீவிர விசாரணை
அதைத்தொடர்ந்து, வீட்டின் உரிமையாளர் ரமேஷ் மற்றும் அங்கு பணிபுரிந்த மேலும் மூன்று பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட வடமாநில இளைஞர் குறித்தும், அவருடன் தங்கியிருந்த மற்ற இருவர் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.