பொதுசிவில் சட்டத்தை ஏற்கவில்லை.. திமுகதான் ஆதரித்து வாக்களித்தது: வைகோ
ஸ்ரீபெரும்புதூர்: பாரதிய ஜனதாவின் கோரிக்கையான பொதுசிவில் சட்டத்தை மதிமுக ஏற்கவில்லை. ஆனால் 2002ல் பொதுசிவில் சட்டம் மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தது திமுகதான் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வைகோ பேசியதாவது:
பல்வேறு கொள்கைகளைக் கொண்ட கட்சிகள், ஒரு தேர்தலைச் சந்திப்பதற்காகக் கூட்டணி அமைக்கின்றன. அதற்காக அவர்கள் தங்களுடைய கொள்கைகளை விட்டுக் கொடுப்பது இல்லை.
இந்தத் தேர்தலில் நாங்கள் பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி சேர்ந்து இருக்கின்றோம். தமிழ் ஈழம் அமைப்பது குறித்து பாரதிய ஜனதா கட்சிக்கு உடன்பாடு இல்லை; அவர்களுடைய பொது சிவில் சட்டம் என்ற கோட்பாட்டை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
2002 ஆம் ஆண்டு, நாடாளுமன்ற மக்கள் அவையில் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் ஒருவர் கொண்டு வந்த, பொது சிவில் சட்டம் என்ற மசோதாவை, அறிமுக நிலையிலேயே நாங்கள் எதிர்த்தோம். பனத்வாலா எதிர்த்தார். எனவே, மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அப்போது அமைச்சர் பிரமோத் மகாஜன் என்னிடம் வந்தார். வைகோ இந்தப் பிரச்சினையில் உங்கள் கொள்கை என்ன என்பது எங்களுக்குத் தெரியும். நீங்கள் மசோதாவை எதிர்த்து வாக்கு அளிக்க வேண்டாம்; ஆதரித்தும் வாக்கு அளிக்க வேண்டாம்.
வாக்கு எடுப்பு நிகழ்கின்ற வேளையில், அவையில் இருந்து வெளியேறி விடுங்கள் என்றார்.
நான் சொன்னேன்: மன்னிக்க வேண்டும். நாங்கள் இந்த மசோதாவை எதிர்த்து வாக்கு அளிப்போம் என்று கூறினேன். அதன்படியே எதிர்த்து வாக்கு அளித்தோம். பனத்வாலா அவர்கள் எனக்கு நன்றி தெரிவித்ததோடு மட்டும் அல்ல, கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களிடமும் இதைக் கூறி, வைகோ கொள்கையில் உறுதியானவர் என்று பாராட்டி இருக்கின்றார்.
ஆனால், அப்போது அதே கூட்டணியில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகம், அந்த மசோதாவை ஆதரித்து, பொது சிவில் சட்டத்தை ஆதரவாக வாக்கு அளித்தது.
பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி சேர்ந்ததற்காக எங்களைக் குறை சொல்லுகின்றீர்களே, நீங்கள் எந்த அடிப்படையில் தி.மு.கழகத்தோடு கூட்டணி வைத்து இருக்கின்றீர்கள்?
இவ்வாறு வைகோ கேள்வி எழுப்பினார்.