உலகை உலுக்கிய பயங்கர 9/11..... 26/11..... 13/11 தாக்குதல்கள்
சென்னை: பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 160க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் 11 என்கின்ற எண்ணைக் குறிவைத்தே உலகை உலுக்கிய பயங்கரவாதத் தாக்குதல்கள் பெரும்பாலும் நடைபெற்று வருகின்றன.
ஏதோ ஒரு விதத்தில் மக்களை கொத்து, கொத்தாக கொன்று குவித்த பயங்கர நிகழ்வுகளுக்கும், 11 என்கின்ற எண்ணிற்கும் தொடர்பு இருப்பதாக சிலர் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இரட்டை கோபுரத் தாக்குதல்: (11/09/2001)
செப்டம்பம் மாதம் 2001 ஆம் ஆண்டு, 11ம் தேதி நடைபெற்ற இரட்டை கோபுரத் தாக்குதலை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. 2001 செப்டம்பர் 11ஆம் தேதி நியூயார்க்கில் உலக வர்த்தக மையம் செயல்பட்டு வந்த இரட்டை கோபுரங்களை அல் கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களால் மோதி தகர்த்தனர். இதில் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மும்பை ரயில் குண்டுவெடிப்பு தாக்குதல்: (07/11/2006)
மும்பையில் 2006 ஆம் ஆண்டு, ஜூலை 11 ஆம் தேதியன்று மாலை 6.24 முதல் 6.35 மணி வரை 11 நிமிடங்களில், 7 புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 209 பேர் பலியாகினர். 700 பேர் காயமடைந்தனர். இத்தாக்குதலில் ஆர்.டி.எக்ஸ் குண்டுகள் பயன்படுத்தப்பட்ட சம்பவம் விசாரணையில் தெரியவந்தது.

மும்பை ஹோட்டல் தாக்குதல்: (26/11/2008)
2008 ஆம் ஆண்டு புதன் கிழமையான 26 நவம்பர் அன்று தொடங்கி நவம்பர் சனிக்கிழமை 29 வரை நீடித்த மும்பை தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். குறைந்தது 308 பேர் இத்தாக்குதலில் காயமடைந்தனர். பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவினர். இவர்கள் மும்பையின் பல்வேறு இடங்களில் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினரை கொன்று குவித்தனர். உலகை அதிரச் செய்த இத்தாக்குதல் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் அளவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியது.

பாரிஸ் தாக்குதல்: (13/11/2015)
இந்த வரிசையில் நேற்றிரவு நடைபெற்ற பாரிஸ் தாக்குதலும் இடம் பெற்றுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் நடைபெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் குறைந்தது 160 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். 11 என்கின்ற எண்ணையும் தாண்டி 13 வெள்ளிக் கிழமை என்கின்ற பயமும் மக்களிடம் இத்தாக்குதலால் உறுதிப் பட்டுள்ளது. மாதத்தின் 13ம் நாள் வெள்ளிக் கிழமையாக இருந்து விட்டால், அது மிகவும் துரதிஷ்டம் கொண்ட நாளாக கருதப் படுகிறது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற நம்பிக்கைகள் அறிவிற்கு உகந்தவையாக இல்லாவிட்டாலும், எண்களால் எந்த தீங்கும் இல்லை...இதுபோன்ற தாக்குதல்களுக்கு மனிதம் தொலைத்து தீவிரவாதிகளாக உருவெடுக்கும் கொடூரர்களே முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications