அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவின் செயலாளராகிறார் ஓபிஎஸ்? மாஃபா, செம்மலைக்கு அமைச்சர் பதவிகள்?
அதிமுகவின் இரு அணிகளையும் இணைக்க பாஜக ஆகஸ்ட் 15 வரை கெடு விதித்துள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
சென்னை: அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தால் ஓ.பன்னீர் செல்வத்துக்கு கட்சியின் வழிகாட்டுதல் செயலாளர் பதவியும் , எம்எல்ஏ-க்கள் செம்மலை, மாஃபா பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவியும் வழங்க எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயலலிதா மறைந்த பிறகு, அதிமுக இரு அணிகளாக பிளவுப்பட்டது. இதனால் இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டது. இந்நிலையில் அதிமுக அணிகள் இணைந்தால் மட்டுமே இரட்டை இலை சின்னம் மீண்டும் கிடைக்கும். மேலும் டிடிவி தினகரனும் தன் ஆதரவாளர்களுடன் கட்சி அலுவலகத்துக்கு வந்து கட்சியையும் ஆட்சியையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள விரும்புகிறார்.
அதேவேளையில் ஆகஸ்ட் 15-க்குள் இரு அணிகளையும் இணைக்க பாஜக கெடு விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தினகரனின் ஆட்டத்தை அடக்க இரு அணிகளையும் இணைப்பது என்று எடப்பாடி தரப்பு முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.
இந்நிலையில் அணிகள் இணைப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி அலுவலகத்துக்கு வருகை தந்துள்ளார். அங்கு அவர் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேலும் இந்த கூட்டத்துக்கு வருகை தந்துள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தால் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சியின் வழிகாட்டுதல் செயலாளர் பதவியும் , எம்எல்ஏ-க்கள் செம்மலை, மாஃபா பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்படலாம் என்று தெரிகிறது.