அடைந்தால் முதல்வர் பதவிதான்... அடம்பிடிக்கும் ஓபிஎஸ்! விட்டு கொடுக்க மறுக்கும் கொங்கு கோஷ்டி!
அடைந்தால் முதல்வர் பதவிதான் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறாம் ஓபிஎஸ். ஆனால் கொங்கு அமைச்சர்கள் இதற்கு முட்டுக்கட்டை போடுகிறார்களாம்.
சென்னை: அதிமுக கோஷ்டிகள் இணைவது உறுதியாகிவிட்ட நிலையில் தமக்கு முதல்வர் பதவிதான் வேண்டும் என அடம்பிடித்துக் கொண்டிருக்கிறார் ஓ. பன்னீர்செல்வம். ஆனால் கொங்கு மண்டல அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களோ எடப்பாடியிடம் இருந்து முதல்வர் பதவி பறிபோவதை விரும்பவே இல்லையாம்.
அதிமுக கோஷ்டிகள் இணைந்து சசிகலா, தினகரனை ஒதுக்கி வைத்துவிட்டன. வேறுவழியில்லாமல் சசிகலாவும் தினகரனும் ஒதுங்கியாக வேண்டிய நிலைக்கு வந்துவிட்டனர்.

எனக்கே முதல்வர் பதவி
இதனிடையே முதல்வர் பதவியில் மீண்டும் அமர வேண்டும் என்பதில் ஓ. பன்னீர்செல்வம் உறுதியாக இருக்கிறார். 'ஒவ்வொரு முறையும் முதல்வர் பதவிக்கு ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவன் நான். அந்தப் பதவியில் நான் அமர்வதுதான் சிறப்பாக இருக்கும் என்கிறாராம் ஓபிஎஸ்.

அமைச்சரவை மாற்றம் இல்லை
அதேநேரத்தில் அமைச்சரவையில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம். எப்போதும்போல அதே அமைச்சர்களே இருக்கட்டும் எனவும் எடப்பாடியிடம் நிபந்தனை விதித்துள்ளார் ஓபிஎஸ்.

கொங்கு பெல்ட் எதிர்ப்பு
ஆனால் அமைச்சர்கள் தங்கமணியும் வேலுமணியும் இதற்கு கிரீன் சிக்னல் கொடுக்கவில்லை. 'எங்கள் சமூகத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு இது. நாங்கள் எதிர்பார்க்காமலேயே வந்து சேர்ந்தது. இதை எப்படி இழக்க முடியும்? இதைத் தவிர வேறு எதையாவது கேளுங்கள்' என உறுதியாகக் கூறிவிட்டனர்.

அடைந்தால் முதல்வர் பதவிதான்
அத்துடன் ஜெயலலிதா மரணத்தில் நியாயம் கிடைக்கும் வரையில் போராடுவோம் என ஓபிஎஸ் பேசுவதும் கூட முதல்வர் பதவியை எதிர்ப்பார்த்துதான் எனவும் கூறப்படுகிறது. அடைந்தால் முதல்வர் பதவி' என்பதில் உறுதியாக இருக்கிறார் ஓ.பி.எஸ். அவர் உறுதி எப்படி இருந்தாலும் டெல்லி எஜமானர்கள் என்ன உத்தரவு போடுகிறார்களோ அதைத்தானே அவரால் செய்ய முடியும் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications