'சீட்' நுனியில் அமர்ந்து சினிமா பார்த்திருப்பீங்க.. 200 நாள் ஆட்சி நடத்தி பாத்திருக்கீங்களா!
சென்னை: இது ஒரு படத்தில் நடிகர் விவேக் பேசும் வசனம்.. அதே நிலையில்தான் நமது முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் இருக்கிறார். முதல்வர் பதவியில் இருந்தாலும் கூட அதன் ஒரு சுகத்தைக் கூட அவரால் அனுபவிக்க முடியாத நிலை. சீட் நுனியில் அமர்ந்து எல்லோரும் சினிமா பார்ப்பார்கள்.. கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் இவர் சீட் நுனியில் தொக்கி அமர்ந்தபடி ஆட்சியே நடத்துகிறார்.
2வது முறையாக முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர் செல்வம் 200 நாட்களை நெருங்கி வருகிறார். தற்போது வெற்றிகரமான 173வது நாளை அவரது ஆட்சி தொட்டுள்ளது.
ஏப்ரல் 15ம் தேதி ஓ.பன்னீர் செல்வம் தனது 2வது முதல்வர் பதவியில் 200 நாட்களைப் பூர்த்தி செய்கிறார். செப்டம்பர் 29ம் தேதி முதல்வர் பதவியில் அமர்ந்தார் ஓ.பன்னீர் செல்வம் என்பது நினைவிருக்கலாம்.
டீக்கடை முதலாளி
சாதாரண டீக்கடை முதலாளியாக இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம். நீண்ட கால அதிமுக விசுவாசி. எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே அதிமுகவில் இருந்து வரும் இவர் ஜெயலலிதாவின் மிகச் சிறந்த விசுவாசி, அடிப்பொடி தொண்டர்.
போடிநாயக்கனூர் எம்.எல்.ஏ
தற்போது போடிநாயக்கனூர் எம்.எல்.ஏவாக இருக்கும் ஓ.பன்னீர் செல்வம், முன்பு பெரியகுளம் எம்.எல்.ஏவாக இருந்தவர்.
2 முறை முதல்வர்
ஜெயலலிதாவிடம் தீவிர பற்று கொண்டவரான இவருக்கு கடந்த 2001ம் ஆண்டு முதல் முறையாக ஜாக்பாட் அடித்தது. 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இவரை முதல்வராக்கினார் ஜெயலலிதா. சுப்ரீம் கோர்ட்டால் அவரது பதவி ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து முதல்வர் பதவியில் ஓ.பன்னீர் செல்வம் அமர வைக்கப்பட்டார். இது பலரையும் முனுமுனுக்க வைத்தது.
சீட் நுனியில் 162 நாட்கள்
2001 செப்டம்பர் மாதம் 21ம் தேதி முதல்வர் பதவியில் அமர்ந்த அவர் 2002, மார்ச் 1ம் தேதி வரை அப்பதவியில் நீடித்தார். அதாவது 162 நாட்கள் முதல்வராக இருந்தார். அதன் பின்னர் மீண்டும் ஜெயலலிதா முதல்வரானார்.
புதிய சாதனை
தற்போது இதில் புதிய சாதனை படைத்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம். அதாவது 162 நாட்களைக் கடந்து 200வது நாளை நோக்கி வெற்றி நடை போட்டு வருகிறார். கடந்த முறையை விட இந்த முறை கூடுதல் நாட்கள் முதல்வராக இருக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. இன்றோடு ஓ.பன்னீர் செல்வம் முதல்வராகி 173 நாட்கள் ஆகி விட்டது.
ஏப்ரல் 15 வந்தால்
சித்திரை பிறந்து ஏப்ரல் 15ம் தேதி வந்தால் அவர் முதல்வர் பதவியில் 2வது முறையாக அமர்ந்து 200 நாட்களைத் தொடுவார். அதிமுகவைப் பொறுத்தவரை இது ஒரு புதிய சாதனையாகும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தவிர்த்து அதிக நாட்கள் முதல்வர் பதவியில் இருந்த அதிமுக பிரமுகராக ஓ.பன்னீர் செல்வம் உருவெடுத்துள்ளார்.
ஆனால் இதையெல்லாம் ஸ்வீட் எடு கொண்டாடுன்னு சொல்வதா வேண்டாமான்னுதான் தெரியலை... நிச்சயம் கொண்டாட மாட்டார்கள் என்று நம்பலாம்!