சென்னை விமான நிலையத்தில் ஓமன் நாட்டு பெண் பயணி மரணம்
சென்னை: மஸ்கட் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த ஓமன் நாட்டுப் பெண் பயணி திடீர் மாரடைப்பால் மரணமடைந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஓமன் நாட்டை சேர்ந்தவர் ஆமினாமரியம் (68). சமீபத்தில் சென்னை வந்திருந்த ஆமினாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஆமினா, இன்று காலை மஸ்கட் செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.
சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை முடிந்து விமானத்திற்காக காத்திருந்த போது ஆமினாவிற்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மயங்கி விழுந்த ஆமினாவை, அதிகாரிகள் உடனடியாக விமான நிலைய மருத்துவ உதவி மையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவரது உடல் குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. மேலும், ஆமினாவின் மரணம் குறித்து அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.