பயணிகள் தலையில் 'பாராங்கல்லை' போடும் ஆம்னி பஸ் கட்டணங்கள்!
சென்னை: விடுமுறைக்கு சென்றவர்கள் சொந்த ஊர் திரும்பும் நிலையில் ஆம்னி பஸ்களின் கட்டணம் தாறுமாறாக அதிகரித்து பயணிகளின் வயிற்றில் புளியைக் கரைத்து வருகின்றது.
பள்ளிக்கூடம் ஜூன் 2 ஆம் தேதி திறக்க இருப்பதால் கோடை விடுமுறையை கழிக்க வெளியூர் சென்றவர்கள் ஊர் திரும்புகிறார்கள்.
இதனால், பஸ் மற்றும் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் தொங்கி கொண்டு பயணம் செய்கின்ற அளவுக்கு கூட்டம் அதிகமாக உள்ளது.

நிரம்பி வழியும் ரயில்கள்:
குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து ரயில்களும், சிறப்பு ரயில்களும் நிரம்பி விட்டன.அரசு பஸ்களில் நீண்ட தூரம் செல்லக்கூடிய பஸ்களுக்கு முன்பதிவு செய்து பயணம் செய்கிறார்கள். விரைவு பஸ் தவிர பிற போக்குவரத்து கழக பஸ்களும் கூடுதலாக தற்போது இயக்கப்படுகின்றன.

பஸ்களிலும் “நோ” இடம்:
மேலும், ஆம்னி பஸ்களிலும் இந்த சீசனில் இடமில்லை. நெல்லை, தூத்துக்குடி, மதுரை, கன்னியாகுமரி, கோவை, பொள்ளாச்சி போன்ற பகுதிகளுக்கு செல்ல இடங்கள் இல்லை.

ஆன்லைன் முன்பதிவு:
குறிப்பிட்ட சில ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி வைத்திருப்பதால் வீட்டில் இருந்தபடியோ அல்லது அலுவலகத்தில் இருந்தபடியோ முன்பதிவு செய்து கொள்ள முடிகிறது.

இஷ்டப்படி கட்டணம்:
ஒன்று, இரண்டு ஆம்னி பஸ்களை வைத்து இயக்கும் ஆபரேட்டர்கள் அவர்கள் இஷ்டத்துக்கு கட்டணம் நிர்ணயித்து கொள்கிறார்கள். தற்போது கோடை விடுமுறை சீசன் என்பதால் அவர்கள் வைப்பதுதான் கட்டணம். புரோக்கர்கள் இதில் தலையிடுவதால் கட்டணம் பல மடங்கு உயர்த்தி நிர்ணயிக்கிறார்கள்.

ஏமாறும் மக்கள்:
ஆம்னி பஸ்களில் இருக்கை வசதி மட்டுமல்ல, ரயிலை போன்று படுக்கை வசதியும் வந்துவிட்டது. மல்டி ஆக்சில், ஹைடெக் ஏ.சி இருக்கை என்று பல்வேறு பெயர்களில் டிக்கெட் முன்பதிவு செய்து மக்களை ஏமாற்றுகிறார்கள்.

போட்டோ மட்டும்தான் உண்மை:
ஆன் லைனில் அந்த பஸ்சின் தோற்றத்தை காண்பித்து அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். ஏ.சி சொகுசு பஸ் என்று கூறி டிக்கெட் வழங்குகிறார்கள். பயணத்தின் போதுதான் அந்த பஸ் சாதாரண பஸ் என தெரியவருகிறது. பஸ்சில் ஏ.சி வசதி மட்டுமே உள்ளது. இருக்கைகள் சாதாரணமாக செமி ஸ்லீப்பராக இருக்கிறது.

வழியில்லாமல் பயணம்:
குடும்பத்தோடு பயணம் செய்ய வந்து பிறகு தான் ஏமாற்றப்பட்டு, மோசடி செய்யப்பட்டு இருப்பது அவர்களுக்கு தெரிகிறது. வேறு வழியில்லாமல் பயணம் செய்ய வேண்டியுள்ளது.

கொள்ளை அடிக்கும் பஸ்கள்:
இதுபோன்ற பஸ் ஆபரேட்டர்களை போக்குவரத்துத்துறை கண்காணிக்காமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஆன் லைனில் டிக்கெட் கட்டணங்களை வெளிப்படைய தெரிவித்து, மக்களிடம் "கொள்ளை" கட்டணம் வசூலிக்கிறார்கள்.

கண்டு கொள்வதில்லை:
ஆன்லைனில் யார் வேண்டுமானாலும் எவ்வளவு கட்டணமும் நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்பதையும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

பயணிகள் அவதி:
சொகுசு பஸ்கள் என்ற பெயரில் ஒரு சில ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் இத்தகைய மோசடிகளில் ஈடுபடுகிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பஸ் பயணிகள் வலியுறுத்துகிறார்கள்.












Click it and Unblock the Notifications