ஆம்னி பஸ் கட்டணம் 10ம்தேதி முதல் அதிகரிப்பு! புதிய வசதிகள் அறிமுகமாகின்றன!!
சென்னை: ஆம்னி பஸ்களின் கட்டணம் அடுத்த வாரம் உயர உள்ளது. ஏற்கனவே பஸ் கட்டணங்கள் விண்ணைத் தொட்டுள்ள நிலையில் இந்த கட்டண உயர்வு நடுத்தர வர்க்கத்து மக்களுக்கு மேலும் ஒரு இடியாக இறங்கியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கத்தின் பொருளாளர் டி.மாறன் அளித்த பேட்டி:
சென்னையில் இருந்து மட்டும் 900 ஆம்னி பஸ்கள் தினசரி பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. ஆம்னி பஸ் பயணிகளுக்கு பல்வேறு புதிய வசதிகளை ஏற்படுத்தி தர ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கம் திட்டமிட்டுள்ளது. ஜிபிஆர்எஸ், வைஃபை போன்ற வசதிகள் ஆம்னி பஸ்களில் வர உள்ளன.
எஸ்எம்எஸ் வசதி
பஸ் ஏறுவதற்காக பயணிகள் நீண்ட நேரமாக ஆம்னி பஸ் நிறுத்தங்களில் நிற்பதை தவிர்க்க பஸ் தற்போது எங்கே வந்து கொண்டுள்ளது என்பதை எஸ்எம்எஸ் மூலமாக பயணிகளுக்கு தெரிவிக்கும் திட்டத்தை கொண்டுவர உள்ளோம். ஜிபிஆர்எஸ் மூலமாக பஸ்களின் போக்குவரத்தை கண்காணித்து இந்த வசதி அளிக்கப்படும்.
ஆன்லைன் புக்கிங்
ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கத்தின் சார்பில் ஆன்லைன் புக்கிங் வெப்சைட்டை துவக்க உள்ளோம். இந்த வெப்சைட்டில் கமிஷன் இன்றி அசல் பஸ் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள அனைத்து ஆம்னி பஸ்களிலும் இந்த ஒரே வெப்சைட்டை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் செலுத்தாமல் டிக்கெட் புக் செய்ய முடியும்.
டிராக் செய்யலாம்
பயணம் செய்ய வேண்டிய பஸ் எந்த இடத்தில் வந்து கொண்டுள்ளது என்பதை பயணிகள் தங்கள் செல்போன் உதவியால் அறிந்துகொள்ளும் வசதியை ஏற்படுத்த உள்ளோம். டிக்கெட்டில் அளிக்கப்படும் ஐடி எண்ணைக் கொண்டு பஸ் எங்கு செல்கிறது என்பதை கண்டறிய முடியும். இவ்வாறு பொருளாளர் டி.மாறன் தெரிவித்தார்.
வைஃபை வருது..
ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க தலைவர் அப்சல் கூறுகையில், சென்னை முதல் எர்ணாகுளம் வரையில், அதிநவீன பேருந்து என்ற பெயரில் ஒரு பஸ்சை இயக்க உள்ளோம். இந்த பஸ்சில் தீ விபத்தை தடுக்கும் கருவிகள் இருக்கும். வைஃபை உள்ளிட்ட வசதிகளும் இருக்கும் என்றார்.
20 சதவீத கட்டணம் அதிகரிப்பு
இதனிடையே ஆம்னி பஸ் சங்கத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது:
செப்டம்பர் 10ம்தேதி முதல் ஆம்னி பஸ்களின் கட்டணத்தை 10 முதல் 20 சதவீதம் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. டீசல் விலை கடந்த பதினைந்து மாதங்களில் 12 ரூபாய் அதிகரித்துள்ளது, சுங்க சாவடிகளில் கட்டணம் அதிகரித்துள்ளது, சேவை வரி அமலாகியுள்ளது போன்றவை கட்டண அதிகரிப்புக்கு காரணம்.
2 வருடங்களுக்கு பிறகு
ஆம்னி பஸ்களின் கட்டணம் 2 வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் உயர்த்தப்படுகிறது. நாடு முழுவதும் ஒரே அனுமதியுடன் வாகனம் இயக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதனிடையே மாற்றப்பட்ட கட்டணங்களுக்கான பட்டியலை போக்குவரத்து கமிஷனரிடம் ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கத்தினர் வழங்கினர்.