ஒருதலைக்காதலுக்கு பலியாகும் இளம் பெண்கள் - டாக்டர் ராமதாஸ் வேதனை
காதல் உன்னதமானது என்பதில் ஐயமில்லை. ஆனால், இருவர் மனதும் உடன்படும்போது ஏற்படுவதுதான் காதல் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை: காதலிக்க மறுக்கும் பெண்களைத் தீயிட்டு எரிக்கும் கலாசாரம் இப்போதுதான் தொடங்கி இருப்பதாகக் கூற முடியாது. கடந்த காலத்தில் இத்தகைய கொடூரங்கள் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
ஒருதலைக்காதல் கொலைகள் பற்றி டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை ஆதம்பாக்கத்தில் காதலிக்க மறுத்த பட்டதாரிப் பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் எரித்துக் கொலை செய்திருக்கிறார். இந்தத் தாக்குதலில் அப்பெண்ணின் தாயாரும் சகோதரியும் தீக்காயம் அடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கின்றனர்.
காதல் விவகாரத்தில் நடந்துள்ள இந்தக் கொடூரக் கொலை பேரதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
தொடர் தொல்லை
ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த இந்துஜா என்ற அந்தப் பெண்ணை அவருடன் பள்ளியில் ஒன்றாகப் படித்த ஆகாஷ் என்ற இளைஞர் பள்ளிப் பருவத்திலிருந்தே காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவரைக் காதலிக்க விரும்பவில்லை என்று அப்பெண் திட்டவட்டமாகக் கூறி விட்ட பிறகும், அந்த இளைஞர் தொடர்ந்து பாலியல் தொல்லை மற்றும் சீண்டல் செய்து வந்துள்ளார்.
எரித்த ஆகாஷ்
அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்ற இளைஞர், தமக்குத் திருமணம் செய்து வைக்கும்படி இந்துஜாவின் தாயார் ரேணுகாவிடம் தகராறு செய்துள்ளார். அதற்கு அவர்கள் சம்மதிக்காத நிலையில், அந்தப் பெண், அவர் தாயார் மற்றும் சகோதரி நிவேதா மீது கையோடு எடுத்துச் சென்றிருந்த எண்ணெயை ஊற்றி தீவைத்து எரித்துள்ளார்.
பலியான இந்துஜா
இதில் அந்தப் பெண் அந்த இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்ற இருவரும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவம் பெற்று வருகின்றனர்.
காதல் உன்னதமானது என்பதில் ஐயமில்லை. ஆனால், இருவர் மனதும் உடன்படும்போது ஏற்படுவதுதான் காதல் ஆகும்.
அரக்கத்தனம்
காதலிக்க விரும்பவில்லை என்று இந்துஜா கூறிவிட்ட நிலையில் தொடர்ந்து அவருக்குத் தொல்லை கொடுத்தது அரக்கத்தனமான செயல் ஆகும். மனதில் சாத்தானின் குணங்கள் குடியேறியவர்களால்தான், பெண்ணின் உணர்வுகளை மதிக்காமல் இத்தகைய இழி செயல்களில் ஈடுபட முடியும். காதலிக்க மறுக்கும் பெண்களைத் தீயிட்டு எரிக்கும் கலாசாரம் இப்போதுதான் தொடங்கி இருப்பதாகக் கூற முடியாது.
கொடூர சம்பவங்கள்
கடந்த காலத்தில் இத்தகைய கொடூரங்கள் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு ஜூலை 30-ம் தேதி விழுப்புரம் வ.பாளையம் கிராமத்தில் தம்மைக் காதலிக்க மறுத்தற்காக நவீனா என்ற சிறுமியைச் செந்தில் என்ற கொடியவன் கொடூரமான முறையில் எரித்துக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டான்.
பள்ளி மாணவி நவீனா
இதில் பாதிக்கப்பட்ட மாணவி நவீனா பள்ளியிறுதி வகுப்பு முடித்து கல்லூரியில் சேர காத்துக்கொண்டிருந்தவர். அவரைக் கொன்ற செந்தில் என்பவன் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்செயல்களுக்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவன். நவீனாவை பல ஆண்டுகளாகப் பின்தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்ததன் மூலம் அம்மாணவியின் படிப்பு நிறுத்தப்படுவதற்கு காரணமாக இருந்தவன்.
நவீனா காப்பற்றப்பட்டிருப்பார்
அவனால், அந்த மாணவி கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருந்த நிலையில், அவன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் நவீனா காப்பாற்றப்பட்டிருப்பார். ஆனால், செந்தில் குடிபோதையில் தொடர்வண்டி இருப்புப் பாதையில் விழுந்து கை, காலை துண்டித்துக்கொண்ட நிலையில், அந்த உண்மையை மறைத்து, நவீனாவின் குடும்பத்தினர்தான் செந்திலின் கை, காலை வெட்டியதாகக் காவல் நிலையத்தில் பொய்யான புகார் கொடுத்து தொல்லை செய்தனர்.
குற்றத்திற்கு தண்டனையில்லை
முற்போக்கு வேடம்போடும் அரசியல் கட்சியினர் தொடங்கி ஊடகத்தினர் வரை செந்திலை தியாகியாகவும் நவீனா குடும்பத்தினரைப் பாவியாகவும் சித்தரித்து பெரும்பாவம் இழைத்தனர். அதனால் துணிச்சல் பெற்ற செந்தில் நவீனாவை எரித்துக்கொன்றான். செந்திலுக்குப் பின்னணியில் இருந்து சமூகக்கேட்டைத் தூண்டி, ஊக்குவித்தவர்கள் எவரும் இன்று வரை அவர்களின் குற்றத்துக்காகத் தண்டிக்கப்படவில்லை.
ஒருதாலைக்காதல் வெறி
விழுப்புரம் நவீனா மட்டுமின்றி, சென்னை சூளைமேடு பொறியாளர் சுவாதி, கரூர் பொறியியல் மாணவி சோனாலி, தூத்துக்குடி ஆசிரியை பிரான்சினா, விருத்தாசலம் பூதாமூர் செவிலியர் புஷ்பலதா கோவை தன்யா எனக் கடந்த ஓராண்டில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் ஒருதலைக் காதல் வெறிக்கு இரையாகித் தங்கள் உயிரை இழந்திருக்கின்றனர்.
காவல்துறை நடவடிக்கை
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவிகளைப் பின்தொடர்ந்து சென்று பாலியல் தொல்லைத் தருவதை சிலர் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அவர்கள் மீது புகார் செய்தாலும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால்தான் காதலிக்க மறுக்கும் பெண்களைக் கொலை செய்யும் அளவுக்கு சில பாவிகள் செல்கின்றனர்.