தமிழ்நாட்டுக்கு எப்படிப்பட்ட முதல்வர் தேவை? .. ஒன்இந்தியா தமிழ் வாசகர்களின் அதிரடி கருத்து!
'ஒன்இந்தியா தமிழ்' ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. தமிழ்நாட்டுக்கு இப்போது எப்படிப்பட்ட முதல்வர் தேவை? என்ற கேள்வி கேட்கப்பட்டு அதற்கு 7 சாய்ஸ்கள் கொடுக்கப்பட்டன.
சென்னை: தமிழகம் இப்போது வரலாறு காணாத அரசியல் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. முதல்வராக இருந்த ஒருவர் மர்மமான முறையில் மரணமடைகிறார், உடனடியாக இன்னொரு முதல்வர் பதவியேற்கிறார். பிறகு அவரது பதவி கட்டாயமாக பிடுங்கப்பட்டுகிறது. சூழ்நிலை காரணமாக எதிர்பார்க்காத இன்னொருவர் முதல்வராக்கப்படுகிறார்.
இப்படி அமர்த்தப்பட்ட முதல்வரின் கட்சி தலைமை பொறுப்பில் இருப்பதாக கூறிக்கொள்பவர் பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் உள்ளார். இப்படியாக ஒரு இடியாப்ப சிக்கலில் உள்ளது தமிழக அரசு.
அரச நிர்வாகம் யாரிடம் உள்ளது, எங்கிருந்து இயக்கப்படுகிறது என்ற ஒரு குழப்பம் நிலவும் இந்த சூழ்நிலையில், 'ஒன்இந்தியா தமிழ்' ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது.
எப்படிப்பட்ட முதல்வர்
தமிழ்நாட்டுக்கு இப்போது எப்படிப்பட்ட முதல்வர் தேவை? என்ற கேள்வி கேட்கப்பட்டு அதற்கு 7 சாய்ஸ்கள் கொடுக்கப்பட்டன. அதில் வாசகர்கள் வாக்களித்திருந்தனர்.
ராஜாஜிக்கு குறைவு
முதலாவது ஆப்ஷனாக கொடுக்கப்பட்டிருந்த ராஜாஜி மாதிரி என்ற பதிலுக்கு, 2.4 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன. 7 சாய்சுகளில் குறைந்த வாக்குகளை பெற்றது ராஜாஜி.
காமராஜர் டாப்
அடுத்தபடியாக காமராஜர் போல என்ற சாய்சுக்கு, 36.75 சதவீத வாசகர்கள் வாக்களித்திருந்தனர். காமராஜர் மீது காலம் கடந்தும் மக்களுக்கு உள்ள அன்பும், அவரது திட்டங்கள் மீதான பார்வையும், இதில் வெளிப்பட்டது. காமராஜருக்குதான் அதிக வாசகர்கள் ஆதரவு அளித்து முதலிடத்திற்கு கொண்டு வந்தனர்.
அண்ணாவை விஞ்சிய எம்.ஜி.ஆர்
அண்ணா போன்று ஒருவர் தேவை என்ற சாய்சுக்கு 2.66 சதவீதம்பேர் மட்டுமே வாக்களித்திருந்தனர். அதேநேரம், எம்.ஜி.ஆர். மாதிரி தேவை என்ற சாய்சுக்கு 5.3 சதவீதம் பேர் வாக்களித்தனர்.
கருணாநிதி
இன்னொரு கருணாநிதி தேவை என்ற சாய்சுக்கு 8.08 சதவீதம் வாக்குகள் கிடைத்திருந்தன. அதாவது, எம்.ஜி.ஆர் பெற்ற வாக்குகளைவிட கருணாநிதிக்கு வாக்குகள் அதிகம் கிடைத்திருந்தன.
சகாயம் மாதிரி வேண்டும்
யாருமே வேண்டாம்.. சகாயம் மாதிரி தேவை.. என்ற சாய்சுக்கு அதிக ஆதரவு காணப்பட்டது. மொத்தம் 26.98 சதவீதம் பேர் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர். இளைஞர்கள், மாணவர்கள் அதை தீர்மானிக்கட்டும் என்ற சாய்சுக்கு 17.83 சதவீதம் பேர் வாக்களித்தனர்.