சசிகலாவை முதல்வராக்குவதற்கு பதிலாக பொதுத்தேர்தலை நடத்தலாம்.. 'ஓன்இந்தியாதமிழ்' போல் முடிவுகள்!
சென்னை: சசிகலாவை முதல்வராக்குவதற்கு பதிலாக பொதுத் தேர்தலை நடத்தலாம் என்று 'ஒன்இந்தியாதமிழ்' வாசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக்கியதன் மூலம், அவரை முதல்வர் பதவிக்கு நகர்த்தி செல்ல முஸ்தீபுகள் நடக்கிறது. ஜெயலலிதாவால் அரசியலில் இருந்து தூரத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த சசிகலா திடீரென முதல்வர் பதவி வரை நகர்வது குறித்து வாசகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய ஒன்இந்தியாதமிழ் வெப்சைட் சார்பில் கருத்து கணிப்பு நடத்தினோம்.
சசிகலா முதல்வர் பதவிக்கான போட்டியில் இருப்பது எதிர்பார்க்கப்பட்டதுதானா, எதிர்பார்க்காமல் நடந்ததா, முதல்வராக ஓ.பி.எஸ் தொடரலாமா, அல்லது சசிகலா முதல்வராகலாமா, பொதுத்தேர்தல்தான் தீர்வா என கேள்விகள் முன் வைக்கப்பட்டன.

எதிர்பார்த்தது
இதில் சசிகலா முதல்வராக நடைபெறும் முயற்சிகள் எதிர்பார்க்கப்பட்டது என்று, 33% வாசகர்கள் வாக்களித்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதுமே, இதற்கான முஸ்தீபுகள் நடைபெறும் என அவர்கள் எதிர்பார்த்திருப்பார்கள் போலும்.

எதிர்பார்க்கவில்லை
எதிர்பார்க்கவேயில்லை, என்று 1.4% வாசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சசிகலா பின்னால் இருந்து ஆட்சியை இயக்க வாய்ப்பிருப்பதாகவோ அல்லது அதிகாரம் வேண்டாம் என்று பரந்த மனதோடு விலகியிருக்கவோ சசிகலா முடிவெடுப்பார் என இவர்கள் எதிர்பார்த்திருக்கலாம்.

ஓ.பி.எஸ்.தான் பெஸ்ட்
ஓ.பி.எஸ்தான் பெஸ்ட் என்ற ஆப்ஷனுக்கு 14.75% வாசகர்கள் வாக்களித்துள்ளனர். இவர்கள் ஓ.பி.எஸ் நிர்வாகம் பிடித்து வாக்களித்தார்களோ, சசிகலாவைவிட ஓ.பி.எஸ் பரவாயில்லை என வாக்களித்தார்களோ என்பது அவர்கள் மனதுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

சசிகலா முதல்வராகலாமே
சசிகலா முதல்வராகலாமே, என்ற ஆப்ஷனுக்கு 2.03% பேர் வாக்களித்துள்ளனர். சசிகலா முதல்வராவதை விரும்புவதற்கு மக்கள் இருந்தாலும், அது சொற்ப எண்ணிக்கையிலேயே உள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

பொதுத்தேர்தலே ஒரே தீர்வு
ஆனால் இதில் கவனிக்கப்பட வேண்டியது, பொதுத்தேர்தலே ஒரே தீர்வு, என்ற ஆப்ஷனுக்குத்தான் அதிகபட்சமாக 48.82% வாக்குகள் கிடைத்துள்ளன. ஜெயலலிதா என்ற பிம்பத்தை முன்னிறுத்திதான் அதிமுக வாக்குகளை வாங்கியது. வேறு யாரையும் அக்கட்சியில் முன்னிறுத்தவில்லை. எனவே, ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில் பொதுத் தேர்தலை நடத்துவது சரி என்பது இவர்கள் விருப்பம். சட்டப்படி இது அத்தியாவசியம் இல்லை என்றபோதிலும், சட்டத்தை தாண்டிய தார்மீக அடிப்படையில் தேர்தலை நடத்துவது சரியாக இருக்கும் என்பதே இந்த வாசகர்கள் விருப்பம்.












Click it and Unblock the Notifications